கோவை : தீபாவளி பண்டிகைக்கு நாளை ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், கோவையில் கடைவீதி பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதுவதால், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை : தீபாவளி பண்டிகைக்கு நாளை ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், கோவையில் கடைவீதி பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதுவதால், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் தீபாவளி பண்டிகை என்றாலே கடைவீதி பகுதிகளான டவுன்ஹால், காந்திபுரம், ஆர்எஸ் புரம், உள்ளிட்ட பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதுவது வழக்கம். இந்த பொதுமக்களின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜேப்படி கொள்ளையர்கள் ஆண்டுதோறும் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு ஜேப்படி கொள்ளையர்களிடமிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின் பேரில், மாநகர காவல் துணை ஆணையாளர்கள் பாலாஜி சரவணன் மற்றும் பெருமாள் ஆகியோர் மேற்பார்வையில் தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல, காந்திபுரம், உக்கடம், ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட 7 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், போலீசார் சந்தேகப்படும் நபர்கள் தென்பட்டால் உடனடியாக கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல, மஃப்டி உடையில் பொதுமக்கள் போல போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.