கோவை : கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் அதிகரித்தும் வரும் லஞ்சத்தால் ஆத்திரம் அடைந்த நோயாளிகள் மற்றும் உறவினர்கள் பாதுகாவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவை : கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் அதிகரித்தும் வரும் லஞ்சத்தால் ஆத்திரம் அடைந்த நோயாளிகள் மற்றும் உறவினர்கள் பாதுகாவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் 5 ஆயிரம் முதல் 7000 வெளி நோயாளிகளும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். அதே போல, இங்கு கோவை உட்பட திருப்பூர், ஈரோடு, நீலகிரி போன்ற பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இதில் குறிப்பாக பிரசவ வார்டில் தினமும் 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதேபோல தினமும் 30க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெறுகிறது. இந்த நிலையில், மேற்கு மண்டலத்தில் மகப்பேறு சிகிச்சையில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் இம்மருத்துவமனையில் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுவதாக நோயாளிகளும் நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதேபோல பிரசவ வார்டில் குழந்தை பிறந்தால் 500 ரூபாய் லஞ்சமாக கேட்கிறார்கள் எனவும் கர்ப்பிணி பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளியை ஒவ்வொரு முறை சந்திக்கும் பொழுதும் 50 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய் என வசூல் செய்வதாகவும், ஸ்ட்ரெச்சர் தள்ளுபவர்களும் பணம் கொடுத்தால் தான் நோயாளியை மாற்று இடத்திற்கு மாற்ற வருகின்றனர் எனவும் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், இன்று லஞ்சம் வாங்குவது தொடர்பான பிரச்சனையில், நோயாளிகளும் நோயாளிகளின் உறவினர்களும் பாதுகாவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி பெண் அழகுமணி கூறும்போது:-
இம்மருத்துவமனையில் எங்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை பார்க்கின்றனர். ஆனால் லஞ்சம் ஊழல் என்பது இங்கு அதிக அளவில் உள்ளது. ஸ்ட்ரெச்சர் எடுப்பது முதல் தூய்மை பணியாளர்கள், செக்யூரிட்டிகள் என அனைவரும் 100 , 200 என வசூல் செய்கின்றனர். எனக்கு குழந்தை பிறந்ததற்காக இரண்டு முறை 500 ரூபாய் என வசூல் செய்துள்ளனர். ஏழைகள் நாங்கள் அரசு மருத்துவமனையை நம்பி வருகின்றோம். ஆனால் இங்கு லஞ்சப் பணம் கொடுத்து கொடுத்தே வெறுத்து விடுகின்றோம் என தெரிவித்தார்.
அதேபோல, நோயாளிகளோ அல்லது அவர்களது உறவினர்களோ மருத்துவமனையில் நடைபெறும் பிரச்சனைகள் குறித்து தட்டிக் கேட்டால் செக்யூரிட்டிகளால் தாக்கப்படுவதாகவும், செக்யூரிட்டிகள் பணம் வாங்குவது தொடர்பாக, உதவி இருப்பிட மருத்துவர் பொன்முடி செல்வனிடம் புகார் அளித்தாலும் அவர் நடவடிக்கை எடுப்பதில்லை என்று குற்றச்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், செக்யூரிட்டிகளால் தாக்குதலுக்கு உள்ளான ஈரோட்டைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் பரமேஸ்வரி மற்றும் அவரது தாயார் கூறும்போது:-
இங்கு பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் தான் மரியாதை. அதேபோல, பணம் இல்லாமல் நோயாளியைப் பார்க்கச் செல்ல வேண்டுமென்றால் மரியாதை கிடைப்பதில்லை. இப்படி எங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்று யாரிடமும் இனி செக்யூரிட்டிகள் நடந்து கொள்ளக் கூடாது. ஆகவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
அரசு மருத்துவமனையை கோயிலாக நம்பி வரும் மக்களை பணத்திற்காக ஊழியர்கள் சிலர் அலைக்கழிப்பதும் மன உளைச்சலை ஏற்படுத்துவதும் மருத்துவமனையின் மீது தவறான அபிப்பிராயத்தை உருவாக்குவதால் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.