கோவை: கோவை கருமத்தம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட கணியூர் சுங்கச்சாவடி அருகே நடைபெற்ற சந்தேகத்துக்குரிய விபத்தில் 50 லட்ச ரூபாய் பணம் பறித்து செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை கருமத்தம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட கணியூர் சுங்கச்சாவடி அருகே நடைபெற்ற சந்தேகத்துக்குரிய விபத்தில் 50 லட்ச ரூபாய் பணம் பறித்து செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட புறநகர் பகுதிகளில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக திட்டமிட்டு பின் தொடர்ந்து வந்து பணம் பறிக்கும் கும்பல்கள் சூலூர், மதுக்கரை, கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை மையமாக வைத்து செயல்படுகிறது.
இப்படி இருக்க இன்று இரவு திருப்பூரைச் சேர்ந்த தமிழரசன் (22) மற்றும் சிவராஜ் (20) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் அவிநாசியில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது இவர்களது வாகனத்துக்கு முன்பு தர்ஷன் (27), ராஜ்குமார் (25) ஆகிய இருவர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கணியூர் சுங்கச்சாவடி அருகே நான்கு பேரும் சென்று கொண்டிருந்த போது இரு வாகனங்களும் திடீரென ஒன்றோடு ஒன்று மோதியது. இதில் நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர்.
இப்படி இருக்க இவர்களை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் ராஜ்குமாரின் முதுகில் வெட்டியுள்ளனர். இதையடுத்து ராஜ்குமாரிடம் இருந்த ரூபாய் 50 லட்சத்தை பறித்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர், அவ்வழியே சென்று கொண்டிருந்த பொதுமக்கள் படுகாயம் அடைந்த சிவராஜை கோவை அரசு மருத்துவமனையிலும் தமிழரசன், தர்ஷன், ராஜ்குமார் ஆகியோரை சிங்காநல்லூர் அருகே உள்ள முத்தூஸ் மருத்துவமனையிலும் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கருமத்தம்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த விபத்தானது பணத்தை கொள்ளையடிக்க நடத்தப்பட்டதா என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.