கோவை : கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு நிறுத்தப்பட்ட ரயில் சேவைகளை மீண்டும் துவக்கக் கோரி தொடர் போராட்டங்களை நடத்த உள்ளதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை : கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு நிறுத்தப்பட்ட ரயில் சேவைகளை மீண்டும் துவக்கக் கோரி தொடர் போராட்டங்களை நடத்த உள்ளதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை - பொள்ளாச்சி இடையேயான அகல ரயில் பாதை பணிகள் காரணமாக, கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டன. பணிகள் நிறைவடைந்து அத்தடத்தில் ரயில் சேவை துவங்கிய நிலையிலும், தென்மாவட்டங்களுக்கான ரயில்கள் இயக்கப்படவில்லை.
இந்நிலையில், தென்மாவட்டங்களுக்கான ரயில் சேவைகளை மீண்டும் துவக்க கோரி, போராட்டம் நடத்துவது தொடர்பாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் ஆலோசணை கூட்டம் நடைபெற்றது.

இதில் தபெதிக, திமுக, சிபிஎம், மதிமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பங்கேற்றனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை - ராமேஸ்வரம், கோவை - தூத்துக்குடி, கோவை - மதுரை மற்றும் கோவை - பெங்களூரு இரவு நேர ரயில் உள்ளிட்ட ரயில் சேவைகளை துவக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

தென் மாவட்டங்களுக்கு மீண்டும் ரயில் சேவையை துவக்கக் கோரி, வருகின்ற 23ம் தேதி கோவை ரயில் நிலையத்தில் கையெழுத்து இயக்கம் நடத்துவது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவில்லை எனில், ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.