கோவை : கோவை மீனா ஸ்டேட் அருகில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவியை சக மாணவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தில், சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.
கோவை : கோவை மீனா ஸ்டேட் அருகில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவியை சக மாணவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தில், சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.
கோவை நியூ சித்தாபுதூர் அருகே உள்ள வெங்கடசாமி சாலையை சேர்ந்தவர் கோகுல்ராஜ் (35), இவர் தனியார் நிறுவனத்தில் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் அருணா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மீனா ஸ்டேட் அருகே உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
இப்படி இருக்க கடந்த மாதம் 28 ஆம் தேதி அவரது பள்ளியில் படிக்கும் மூன்று மாணவர்கள் இந்த சிறுமியை முகத்தில் மற்றும் கண்ணருகே கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் முகத்தில் பலத்த காயம் அடைந்த சிறுமியை பெற்றோர்கள் அவிநாசி சாலையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது கண் அருகே உள்ள எலும்பு விரிசல் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிறுமியின் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கடந்த இரண்டாம் தேதி சிறுமியின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் முறையான விசாரணை ஏதும் மேற்கொள்ளாமல், சிறுமிக்கு சிகிச்சை முடிந்த பின்பு இதுகுறித்து பேசலாம் என தெரிவித்ததாக சிறுமியின் தந்தை தெரிவித்தார்.
இப்படி மெத்தனமாக பதில் அளிக்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது சிறுமியின் தந்தை இன்று பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் தந்தை கோகுல்ராஜ் கூறும்போது :-
எனது குழந்தையை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த பள்ளியில் சேர்த்தோம். ஆனால், என் மகள் சக மாணவர்களால் கடுமையாக தாக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், பள்ளி நிர்வாகம் சார்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.
அதேபோல, எனது மகளுக்கு நடந்த இந்த கொடூரம் போல மற்ற குழந்தைகளுக்கு நடக்கக்கூடாது என்ற எண்ணத்தில் நான் போலீசாரிடம் புகார் அளித்துள்ளேன். போலீசார் உரிய விசாரணை நடத்தி தகுந்த தண்டனை பெற்று தர வேண்டும் என கேட்டு கொள்வதாக தெரிவித்தார்.