கோவை : பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் மார்பக புற்றுநோய் குறித்த ஒரு மாத இலவச விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது.
கோவை : பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் மார்பக புற்றுநோய் குறித்த ஒரு மாத இலவச விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது.
மார்பக புற்றுநோயை ஆரம்ப கட்டங்களில் கண்டறிந்து, நோயை முழுமையாக குணப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ள இந்த முகாமில், பதிவு செய்தவர்களுக்கு முற்றிலும் இலவசமாக ஆலோசனை வழங்கப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பி.எஸ்.ஜி மருத்துவமனையின் மருத்துவ புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் கிருபா ஷங்கர், "மார்பக புற்றுநோய் நம் நாட்டில் மிகவும் பொதுவானதாகி வருகிறது. மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது உயிர்வாழ்வதற்கு முக்கியமாகும். மார்பக சுய பரிசோதனைகள், மருத்துவ பரிசோதனை மற்றும் ஸ்கிரீனிங் மேமோகிராபி, ஆரம்பகால நிலையில் மார்பக புற்றுநோயைக் கண்டறிய உதவுவதில் இன்றியமையாதது என்றும் முழுமையான குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்றார்.
இந்தியாவில் 60% மார்பக புற்றுநோய் 3 மற்றும் 4 ஆம் நிலைகளில் அடையாளம் காணப்படுவதால், இந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்த அவர், இந்த முகாம் பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நோயைப் பற்றி அறிந்துகொள்ள பயனுள்ளதாக அமையும் என்று கூறினார்.
இதுகுறித்து திட்ட இயக்குநர் டாக்டர் டி பாலாஜி கூறுகையில், "மார்பக புற்றுநோய்க்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை எனவும் உடல் பருமன், வயது, உணவு, புகையிலை பயன்பாடு போன்றவை மார்பக புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்றார். நோய் குறித்து ஆரம்பகால கண்டறிதல் மூலம் வெளிநாடுகளில் 89% மார்பக புற்றுநோய் நோயாளிகள் குணப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் ஆரம்ப கட்டத்தில் நோயைக் கண்டறிய பெண்கள் முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், டாக்டர் சிவகுமார் குப்புசாமி மற்றும் டாக்டர் மோகனராஜ் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர், டாக்டர் ரமேஷ் சந்தர், குழந்தை புற்றுநோயியல் நிபுணர் மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் மதுலிகா விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.