கோவை : சின்னதடாகம் பகுதியில் கிராம சபை கூட்டத்தில் செங்கல்சூளைகளுக்காக விதிமுறைகளை மீறி செம்மண் எடுப்பது தொடர்பாக கேள்வி எழுப்பிய மக்கள் நீதி மய்யத்தினர் 3 பேர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் நடவடிக்கை எடுக்க கோரி, மநீம கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
கோவை : சின்னதடாகம் பகுதியில் கிராம சபை கூட்டத்தில் செங்கல்சூளைகளுக்காக விதிமுறைகளை மீறி செம்மண் எடுப்பது தொடர்பாக கேள்வி எழுப்பிய மக்கள் நீதி மய்யத்தினர் 3 பேர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் நடவடிக்கை எடுக்க கோரி, மநீம கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விதிமுறைகளை மீறி 100 அடி வரை செம்மண் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் எடுக்கப்படுகிறது. அளவுக்கதிகமாக எடுக்கப்படும் செம்மண்ணால், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதி ஒரு பள்ளத்தாக்கைக் போல காட்சி அளித்து வருவதோடு, மனித - யானை மோதல்களுக்கு காரணமாகவும் உள்ளது.
இந்நிலையில் தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுப்பது தொடர்பாக புகாரளிப்பவர்களை செங்கல் சூளை ஆதரவாளர்கள் மிரட்டி வருகின்றனர். நேற்று சின்னதடாகம் பகுதியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் விதிமுறைகளை மீறி செம்மண் எடுப்பது குறித்து மக்கள் நீதி மய்யத்தினர் கேள்வி எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த செங்கல் சூளை ஆதரவாளர்கள் பாபு, பிரபு மற்றும் சுரேஷ் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், 3 பேர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் நடவடிக்கை எடுக்க கோரி, மநீம துணைத்தலைவர் மகேந்திரன் தலைமையில் அக்கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத் தலைவர் மகேந்திரன், சின்னதடாகம் கிராமசபை கூட்டத்தில் செங்கல் சூளைக்கு மண் எடுப்பது குறித்து கேள்வி கேட்டதால் தாக்கப்பட்டு இருக்கின்றனர் என்றும் அங்கிருந்த போலீசாரும் அதை நேரில் பார்த்து இருக்கின்றனர் எனவும் தடாகம் காவல் நிலையத்தில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய மறுக்கின்றனர் என்று கூறினார்.
எனவே, சம்மந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதுதொடர்பாக நடவடிக்கை இல்லை எனில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார். மேலும், காயம் அடைந்தவர்களுடன் கட்சித்தலைவர் கமல்ஹாசன் இன்று காலை தொலைபேசியில் பேசியதாக அவர் தெரிவித்தார்.