கோவை : கோவை பந்தய சாலையில் உள்ள சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் மருந்து வணிகர்களுக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைப்பெற்றது.
கோவை : கோவை பந்தய சாலையில் உள்ள சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் மருந்து வணிகர்களுக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைப்பெற்றது.
கடந்த ஆண்டு பருவ மழை காலத்தில் கோவை மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். மேலும், இவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் சுமார் 35 பேர் உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து, அரசு மருத்துவமனை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து ஒவ்வொரு கிராமப்புறங்களிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதன் தொடர்ச்சியாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்தது.
இப்படியிருக்க, தற்போது மீண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு துவங்கியுள்ளது. அதேபோல டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கோவை பந்தய சாலையிலுள்ள சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் மருந்து வணிகர்களுக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை சுகாதாரத்துறை இணை இயக்குனர் பானுமதி தலைமை தாங்கி நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருந்து வணிகர்கள் மருந்து கடையை எப்படி தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டது.
அதேபோல குளிர்சாதனப் பெட்டிகளின் பின் தேங்கும் நீரை தினமும் அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அழகுக்காக வைக்கப்படும் மணிபிளான்ட் செடியின் நீரை தினமும் மாற்ற வேண்டும் எனவும் இந்த கூட்டத்தில் மருந்து கடை உரிமையாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
அதேபோல, காய்ச்சல் பாதிப்பினால் வரும் நோயாளிகளுக்கு வணிகர்கள் தாங்களாகவே மருந்து கொடுக்காமல் மருத்துவர்களை அணுகும்படி நோயாளிகளுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுரைகள் வழங்கினர்.

இக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருந்து வணிகர்கள் கலந்து கொண்டு சுகாதாரத் துறையின் ஆலோசனைகளை பெற்றனர்.