கோவை : கோவை சாய்பாபா காலனி அருகே கல்லூரி அதிபர் வீட்டில் கொள்ளையர்கள் 25 லட்சம் மதிப்புள்ள வைரம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவை சாய்பாபா காலனி அருகே கல்லூரி அதிபர் வீட்டில் கொள்ளையர்கள் 25 லட்சம் மதிப்புள்ள வைரம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சாய்பாபா காலனி பாரதிபார்க் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி(70). இவர் தடாகம் சாலையில் ஸ்ரீரங்கநாதன் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருவதுடன் பொறியியல் கல்லூரி ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இவரும் இவரது குடும்பத்தினரும் மேல்தளம், கீழ்த்தளம் என இரண்டு வீடுகளையும் பயன்படுத்தி வந்தனர். மேல் தளத்தில் பணம் மற்றும் நகைகளை வைத்துள்ள நாராயணசாமி குடும்பத்தினர் கீழ் தளத்தையே அதிகம் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், இன்று நாராயணசாமியின் குடும்பத்தார் எதேர்ச்சியாக மேற்தளத்தில் உள்ள அறைக்குச் சென்று பார்த்த பொழுது கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 25 லட்ச ரூபாய் மதிப்புடைய வைரம் , தங்க நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து நாராயணசாமி சாய்பாபா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனர். அதேபோல, வீட்டின் முன்புறம் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டின் முன்புறம் சிசிடிவி கேமராக்கள் இருப்பதை அறிந்த கொள்ளையர்கள் சிசிடிவி கேமராக்கள் இல்லாத பின்புறம் வழியாக சென்று கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல கொள்ளையர்கள் பக்கத்து வீட்டின் சுவர் வழியாக ஏறி வீட்டிற்குள் நுழைந்ததும் தடயங்களில் தெரியவந்துள்ளது.
எனவே வீட்டைப்பற்றி நன்கு அறிமுகமான நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பதும், கொள்ளை போன விஷயம் இரு நாட்கள் கழித்தே வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததும் குறிப்பிடத்தக்கது.