கோவை : நீட் தேர்வில் தேனி மருத்துவக்கல்லூரியில் ஆள்மாறாட்டம் செய்ததையடுத்து, மாணவர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், தற்போது கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரையடுத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை : நீட் தேர்வில் தேனி மருத்துவக்கல்லூரியில் ஆள்மாறாட்டம் செய்ததையடுத்து, மாணவர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், தற்போது கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரையடுத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேனி மருத்துவக்கல்லூரியில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து உதித்சூர்யா என்ற மாணவர் மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு கட்ட விசாரணையில், உதித்சூர்யா ஆள் மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்தது உறுதியானது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் ஆவணங்களை சரிபார்க்க மருத்துவக் கல்லூரி இயக்குனரகம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் மாணவர்களின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டது.
இதில், மாணவர் ஒருவரின் புகைப்படமும் மாணவி ஒருவரின் புகைப்படமும் வேறு வேறாக இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கல்லூரி நிர்வாகம் உடனடியாக மருத்துவக் கல்லூரி இயக்குனரகத்திற்கு தகவல் கொடுத்தது. இதைத்தொடர்ந்து மருத்துவக்கல்லூரி இயக்குநரகம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தேனியை தொடர்ந்து கோவையிலும் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடைபெற்றதாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக்கல்லூரி டீன் ராமலிங்கம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது
தேனி சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன் மருத்துவ இயக்குனரகத்தில் இருந்து எங்களுக்கு வந்த உத்தரவையடுத்து, அரசு உத்தரவுப்படி அனுமதிக்கப்பட்ட 150 மாணவர்களின் அனைத்து விதமான சான்றிதழ்களையும் சரி பார்த்தோம். அதில் இருவரது புகைப்படங்களில் மாறுபாடு இருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ளதது.
நீட் அட்மிட் கார்டில் இருப்பவர் புகைப்படமும், தேர்வுக்குழு வழங்கிய அட்மிட் கார்டில் இருந்த புகைப்படமும் மாறுபட்டு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இருவரது பெற்றோரையும் அழைத்துப் பேசி உள்ளோம். முறைகேடு நடைபெற்று இருக்கிறதா இல்லையா என தேர்வுக்குழு தான் நிரூபிக்க வேண்டும்.
தேர்வுக்குழுவிடம் உள்ள மாணவர்களின் கைரேகைகளைக் கொண்டு சரி பார்க்க மாணவர்கள் இருவரும் சென்னை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தவறு நடந்திருந்தால் மருத்துவக் கல்லூரி இயக்குனரகம் தான் நடவடிக்கை எடுக்கும். அவர்கள் அனுப்பிய மாணவர்களை கல்லூரியில் சேர்த்துக்கொண்டது மட்டும் தான் எங்கள் வேலை என தெரிவித்தார்.