கோவை : ஹைட்ரஜன் என்ஜீன் கண்டுபிடிப்பைத் தொடரக்கூடாது என கடிதம் மூலம் மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் மற்றும் மாநகர காவல் துணை ஆணையாளரிடம் ஆராய்ச்சியாளர் சௌந்தரராஜன் குமாரசாமி புகார் மனு அளித்துள்ளார்.
.கோவை : ஹைட்ரஜன் என்ஜீன் கண்டுபிடிப்பைத் தொடரக்கூடாது என கடிதம் மூலம் மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் மற்றும் மாநகர காவல் துணை ஆணையாளரிடம் ஆராய்ச்சியாளர் சௌந்தரராஜன் குமாரசாமி புகார் மனு அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்தவர் சௌந்தரராஜன் குமாரசாமி. இவர் பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத சூப்பர் சோனிக் ஹைட்ரஜன் என்ஜீன் எனப்படும் வாகன என்ஜீனை கண்டுபிடித்துள்ளார். இந்த கண்டுபிடிப்பிற்கு இந்திய அரசின் அங்கீகாரம் கிடைத்ததையடுத்து, ஜப்பான் நாட்டில் இதற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து இதற்கான அலுவலகப் பணிகள் ஜப்பான் நாட்டில் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த புது கண்டுபிடிப்பு தொடர்பாக ஆராய்ச்சியாளருக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 2009ம் ஆண்டில் லஷ்கர்-இ-தைபா அமைப்பு பெயரில் மிரட்டல் கடிதம் இவருக்கு வந்ததுள்ளது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இந்த புதிய கண்டுபிடிப்பை எந்த நாட்டிலும் தொடரக்கூடாது தொடர்ந்தால் கொலை செய்யப்படுவீர்கள் என ஆராய்ச்சியாளர் சுந்தரராஜன் வீட்டிற்கு கடந்த 14ம் தேதி கடிதம் மூலம் மீண்டும் மிரட்டல் வந்துள்ளது. ஆனால் தற்போது வந்துள்ள கடிதத்தில் எந்த பெயரும் குறிப்பிடப்படவில்லை.
இந்த நிலையில், இந்த புகாரின் பேரில் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என வலியுறுத்தி ஆராய்ச்சியாளர் சுந்தர்ராஜன் மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு புகார் மனு அளித்துள்ளார். இதை தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
சுற்றுச்சூழல் சார்ந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளருக்கு தீவிரவாதிகளின் பெயரிலும், பெயர் குறிப்பிடாமலும் கொலை மிரட்டல் வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.