கோவை : புதிய மோட்டார் வாகன சட்டத்தில் விதி மீறல்களுக்கு விதிக்கப்படும் அதிகப்படியான அபராதத்தை கண்டித்து நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் பங்கேற்றன.
கோவை : புதிய மோட்டார் வாகன சட்டத்தில் விதி மீறல்களுக்கு விதிக்கப்படும் அதிகப்படியான அபராதத்தை கண்டித்து நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் பங்கேற்றன.
மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தில் விதி மீறல்களில் ஈடுபடும் லாரிகளுக்கு அதிகப்படியான அபராத தொகை விதிக்கப்படுகின்றது. இந்நிலையில், புதிய மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்தும், அதிகப்படியான அபராதம் விதிக்கப்படுவதை ரத்து செய்ய வலியுறுத்தியும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் இன்று அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கு மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை. லாரிகள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
யூனிபார்ம் போடவில்லை என்றால் கூட 2000 ரூபாய் அபராத விதிக்கப்படுவதாகவும், அபராதம் செலுத்தும் வரை லாரிகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் லாரி ஓட்டுனர்கள் குற்றம் சாட்டினர். வேலை நிறுத்தம் காரணமாக கேரளா உட்பட வெளிமாநிலங்களுக்கு சரக்கு ஏற்றி செல்லும் லாரிகள் இயக்கப்படாததால் பொருட்கள் தேக்கமடைந்தன.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த லாரிகள் வேலை நிறுத்த போராட்டமானது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்படுவதாகவும் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். அதே வேளையில் கூட்ஸ் லாரி அசோசியேசன் உட்பட வேறு சில லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.