கோவை : காவேரி கூக்குரல் திட்டத்திற்கு உள்ளாட்சித்துறை சார்பில் ஐந்து கோடி மரங்கள் கூட கொடுக்க தயாராக இருப்பதாக ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை : காவேரி கூக்குரல் திட்டத்திற்கு உள்ளாட்சித்துறை சார்பில் ஐந்து கோடி மரங்கள் கூட கொடுக்க தயாராக இருப்பதாக ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

காவிரி கூக்குரல் நிறைவு விழாவில் பங்கேற்ற ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில். காவிரி கூக்குரல் இயக்கத்திற்காக கடந்த 3ம் தேதியில் இருந்து வேளாண் காடு வளர்ப்பதற்காக, விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த இயக்கத்தை சத்குரு துவங்கி இருக்கின்றார். இந்த திட்டத்தின் மூலம் 242 கோடி மரங்களை நடுவது என்பது சிறப்பம்சமாகும் என்றவர், மழைநீர் சேகரிப்பில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும் இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என்றார்.

மேலும், குடிமராமத்து திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் நதிகள் சீரமைக்கும் திட்டத்தை துவங்கி, எல்லா மாநிலத்திற்கும் சென்று காவிரி கூக்குரல் திட்டத்திற்கு அனைவரையும் ஒன்றிணைத்துள்ள சத்குரு, கோவை மாவட்டத்தில் இருப்பதே பெருமை எனவும் மக்கள் ஒன்று சேர்ந்தால் தான் இந்த திட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.

சத்குருவின் திட்டங்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, காவேரி கூக்குரல் திட்டத்திற்குத் தேவையான மரக்கன்றுகளை, உள்ளாட்சித் துறை சார்பில் 5 கோடி மரங்கள் கேட்டால் கூட கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். சில மரங்களை வளர்ப்பதற்கு, அனுமதி வழங்குவதற்கு எளிமைப்படுத்தித் தர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

தற்போது, கோவையில் பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, பாலங்கள் கட்டும் போது போக்குவரத்து நெரிசலை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவினாசி சாலையில் 9.5 கிலோ மீட்டர் பாலத்திற்கு டிசைன் முடிந்து விட்டதாகவும் விரைவில் பாலம் பணிகள் துவங்கும் என்றார். மேலும் விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைவில் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.