கோவை : அமமுக தான் ஆரம்பித்த கட்சியென ஆதங்கத்தில் சொன்னதாகவும் அமமுக எனது கட்சி என்று சொல்லியதில் எந்த மாற்றமும் இல்லை எனவும், இதற்கு டிடிவி தினகரன் தான் பதிலளிக்க வேண்டும் என புகழேந்தி தெரிவித்தார்.
கோவை : அமமுக தான் ஆரம்பித்த கட்சியென ஆதங்கத்தில் சொன்னதாகவும் அமமுக எனது கட்சி என்று சொல்லியதில் எந்த மாற்றமும் இல்லை எனவும், இதற்கு டிடிவி தினகரன் தான் பதிலளிக்க வேண்டும் என புகழேந்தி தெரிவித்தார்.

பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமுமுகவில் இருந்து தன்னை டிடிவி தினகரன் நீக்கிவிட்டதாக சொல்லவில்லை என தெரிவித்தார். அமுமுகவில் தொண்டர்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ளது எனவும் கோவை மாவட்ட செயலாளர் தவறான தகவல் அளித்ததால் பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
அமமுக தொண்டர்கள் கொத்து கொத்தாக கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர் எனவும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என கூறிய புகழேந்தி, அமமுக மாவட்ட செயலாளர்கள் தோற்று விட்டதாகவும், மண்டல பொறுப்பாளர்களால் கட்சி பாதி அழிந்து விட்டதாகவும் நாளுக்கு நாள் தொய்வு அடைந்து வரும் கட்சியை டிடிவி தினகரன் சரி செய்யாதது வருத்தமளிப்பதாக கூறினார்.
வேறு கட்சியில் இணைவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் யாரோடும் இதுவரை பேசவில்லை என தெரிவித்தார். மேலும், அமமுக தான் ஆரம்பித்த கட்சியென ஆதங்கத்தில் சொன்னதாகவும் கட்சிக்காக அவ்வளவு கஷ்டப்பட்டுள்ளேன் என்பதால் அப்படிச் சொல்லியதாகவும் கூறிய அவர், இதற்கு டிடிவி தினகரன் தான் பதிலளிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கத் தயார் எனவும் விசாரணைக்காக டிடிவி தினகரன் இதுவரை தன்னை அழைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். அமமுக எனது கட்சி என்று சொல்லியதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்த புகழேந்தி, சசிகலாவிற்கு ஆதரவாக முதல் முதலாக குரல் கொடுத்தது தான் என்று அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மாதிரியான ஆட்கள் இயக்கத்தை அழிக்க வந்தவர்கள் எனவும் இது டிடிவி தினகரனுக்கு தெரியும் என தெரிவித்தார். தான் மேடையேறும் போது, வெற்றிவேல், பழனியப்பன் எங்கிருந்தார்கள் என தெரியவில்லை எனவும் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக புத்தகம் எழுதி உள்ளதாகவும் அது விரைவில் வெளிவரும் என்றார். அப்போது, சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக பல உண்மைகள் வெளிவரும் என தெரிவித்த அவர், உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போட முடியாது எனவும் நவம்பரில் வரும் உள்ளாட்சி தேர்தலில் களம் காண்போம் என்று கூறினார்.