கோவை : சமூக சேவைக்காக வழங்கப்பட்ட வெளிநாட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் 5 ஆண்டு சிறை மற்றும் ரூ. 50,000 அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை : சமூக சேவைக்காக வழங்கப்பட்ட வெளிநாட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் 5 ஆண்டு சிறை மற்றும் ரூ. 50,000 அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ரீச் என்ற தனியார் சமூக சேவை நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான கல்விக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் அளிக்கப்பட்டது. 1992 முதல் 2002ம் ஆண்டு வரை, இந்த அமைப்பின் தலைவராக இருந்த மார்கோ என்பவர் ஞானக்கண் என்பவருடன் இணைந்து வெளிநாட்டில் இருந்து கிடைக்கப் பெற்ற மூன்று கோடி ரூபாய் பணத்தை தங்களது சொந்த தேவைக்காக முறைகேடாக பயன்படுத்தி உள்ளனர்.
இது குறித்து சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இருவரும் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், குழந்தைகள் கல்வி செலவிற்கு என பணம் பெற்று, அதனை முறைகேடாக பயன்படுத்திய மார்கோ மற்றும் ஞானக்கண் ஆகியோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதித்து தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரவி உத்தரவிட்டார்.