திருப்பூர் : திருப்பூர் காங்கயம் சாலையில் தேமுதிக சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்காக வைக்கப்பட்ட தேமுதிக கொடி கம்பங்களை அப்புறப்படுத்திய அதிகாரிகளுடன் தேமுதிகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் : திருப்பூர் காங்கயம் சாலையில் தேமுதிக சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்காக வைக்கப்பட்ட தேமுதிக கொடி கம்பங்களை அப்புறப்படுத்திய அதிகாரிகளுடன் தேமுதிகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை அறிவித்திருந்த நிலையில், கட்சித் தலைவர்களும் பொது மக்களுக்கு இடையூராக பேனர்கள், கொடிகளை வைக்கக் கூடாது என தங்கள் கட்சியினருக்கு அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், திருப்பூர் காங்கயம் சாலையில் தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நாளை நடைபெறுகிறது. இதனையடுத்து அக்கட்சித் தலைவர் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோரை வரவேற்கும் விதமாக திருப்பூர் -- காங்கயம் சாலையில் தேமுதிக சார்பில் பொது மக்களுக்கு இடையூறாகப் பிளக்ஸ் பேனர்களும், கொடி கம்பங்களும் அமைக்கப்பட்டிருந்தது,

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இருந்த தேமுதிக கட்சி பேனர்களையும், கொடி கம்பங்களையும், அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போது, சம்பவ இடத்திற்கு வந்த தேமுதிகவினர், பேனர்களையும், கம்பங்களையும் அகற்றக் கூடாது என மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், தேமுதிகவின் முப்பெரும் விழா பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தேமுதிகவின் நிறுவனரும் பொதுச் செயலருமான விஜயகாந்த் திருப்பூர் வந்தார். அவரை வரவேற்க ஏராளமான கட்சி தொண்டர்கள் திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில் காத்திருந்து அவரை வரவேற்றனர். அவருடன் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் திருப்பூர் வந்தடைந்தனர்.
