கோவை : வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தப்படும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.
கோவை : வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தப்படும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளரும், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான நல்லசாமி கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, 1947 ஆம் ஆண்டு நாட்டின் வளர்ச்சி விகிதத்தில் விவசாயத்தின் பங்களிப்பு 65 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது வெறும் 15 சதவீதமாக குறைந்துள்ளது. 60 விழுக்காடு மக்கள் சார்ந்திருக்கும் விவசாயத்திற்கு பட்ஜெட்டில் 2.5 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. விவசாய நாடான இந்தியா 70 சதவீதம் சமையல் எண்ணெய் நுகர்விற்கும், 60 சதவீத பருப்பு நுகர்விற்கும் இறக்குமதியையே நம்பியுள்ளது. இதனால் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு பாதிக்கப்படுவதாக கூறினார்.
மேலும், தொழிற்துறைக்கு கொடுத்த முன்னுரிமையை, விவசாயத்திற்கும் கொடுத்திருந்தால் நாடு வல்லரசாகி இருக்கும். தற்போது நாடு சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டிருக்காது. வளர்ந்த நாடுகளில் தடை செய்யப்பட்ட தொழில்களுக்கு இந்தியாவில் சிகப்பு கம்பளம் விரித்ததன் விளைவாக நிலம், நீர்,காற்று என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஆயத்த ஆடை தொழிலால் நொய்யலாறு இறந்து விட்டது. கடந்த 8 நாட்களில் 25 டி.எம்.சி அளவிலான காவிரி நீர் வீணாக கடலில் கலந்தது. காவிரியில் தினசரி நீர் பங்கீட்டை மேற்கொண்டிருந்தால் இந்த இழப்பு ஏற்பட்டிருக்காது. குறுவை சாகுபடியும் சாத்தியமாகி இருக்கும் என்றார்.
அதேபோல, கள் இறக்குவதும் பருகுவதும் அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு அளித்துள்ள உணவு தேடும் உரிமை. இதை வலியுறுத்தி வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தப்படும் என கூறிய நல்லசாமி, சிறு குறு விவசாயிகளுக்கு அளிக்கப்படும் ஓய்வூதியம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வூதியத்திற்கு இணையாக வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.