கோவை : பில்லூர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் அதிகப்படியான நீர் வரத்து காரணமாக பரளிக்காடு சுற்றுலா மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை : பில்லூர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் அதிகப்படியான நீர் வரத்து காரணமாக பரளிக்காடு சுற்றுலா மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான பரளிக்காடு என்னுமிடத்தில் தமிழ்நாடு வனத்துறை மற்றும் பழங்குடியின மக்கள் இணைந்து நடத்தும் சூழல் சுற்றுலா நடைபெற்று வருகிறது. இயற்கை எழில் மிகுந்த மலைக்காட்டின் நடுவே அமைந்துள்ள பில்லூர் அணையின் நீர்தேக்க பகுதியில் நடைபெறும் இந்த சூழல் சுற்றுலாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் நடத்தப்படும் இச்சூழல் சுற்றுலாவில் அடர்ந்த காட்டின் நடுவே அமைந்துள்ள பில்லூர் அணையின் நீர் தேக்க பகுதியில் பயிற்சி பெற்ற பழங்குடியின மக்களுடன் பாதுகாப்பான பரிசல் பயணம், ஆற்றுக்குளியல், பழங்குடியின மக்கள் தயாரித்து வழங்கும் சுவையான இயற்கை உணவு, அடர்ந்த காட்டில் ட்ரக்கிங் ஆகியவை வனத்துறையினரின் கண்காணிப்பில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதகாலமாகவே மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது. பில்லூர் அணை முழு கடந்த ஒரு மாதத்தில் மூன்று முறை கொள்ளளவை எட்டியதால் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. மேலும் அதிகப்படியான நீர் அணையில் தேங்கி இருப்பதனால் இந்த சூழல் சுற்றுலா நடைபெறும் இடமான பரளிக்காடு பகுதி முழுவதும் தண்ணீருக்கடியில் மூழ்கி வெள்ளக்காடாக மாறியுள்ளதால் பரிசல்கள் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா வரும் பயணிகளின் பாதுகாப்பு கருதி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை சூழல் பரளிக்காடு சுற்றுலா ரத்து செய்யப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த சூழல் சுற்றுலா நடைபெறாமல் தள்ளிப் போவதால் இதனை நம்பி வேலைவாய்ப்பு பெற்று வந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. பரிசல் இயக்குவது மற்றும் உணவு தயாரிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுவந்த பழங்குடியின தொழிலாளர்கள் ஆண்கள்,பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பின்றி இருப்பதால் அவர்களது வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.