கோவை : கோவை பி.என் புதூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென பழுதாகி நின்றதால் மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்துச் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் திரும்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை : கோவை பி.என் புதூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென பழுதாகி நின்றதால் மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்துச் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் திரும்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை கோட்டத்தில் உள்ள அரசுப் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி சாலைகளில் நிற்கும் அவலங்கள் அதிகரித்து வருகிறது.
இப்படி சாலைகளில் நிற்க்கும் பேருந்துகளால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்புகளும் ஏற்படுகிறது.
ஏற்கனவே கோவை மாநகரம் மேம்பால கட்டுமான பணிகளால் போக்குவரத்து நெரிசலில் தவித்து வருகிறது.
இப்படியிருக்க அடிக்கடி அரசு பேருந்துகள் பழுதாகி நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்துவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

இந்தநிலையில் நேற்று இரவு காந்திபுரம் பகுதியில் இருந்து மருதமலை நோக்கி சென்றுகொண்டிருந்த TN 38 N 1969 என்ற எண் கொண்ட அரசு பேருந்தானது பிஎன் புதூர் சுடுகாடு அருகே பழுதாகி சாலையின் நடுவே நின்றது.
இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பேருந்தை தள்ளி ஓரத்தில் நிறுத்த முற்பட்டனர். ஆனால் பேருந்தை நகர்த்த முடியவில்லை.
இந்த சம்பவத்தால் சுமார் 2 கிலோ மீட்டருக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் வடவள்ளியில் இருந்து நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்த ஆம்புலன்சானது வேறு வழியின்றி திருப்பி அனுப்பப்பட்டது .
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்து வந்த பணிமனை தொழிலாளர்கள் பேருந்தை சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் போராடி சரி செய்தனர்.
இதையடுத்து போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
பெரும்பாலான அரசு பேருந்துகள் முறையாக பழுது பார்க்காமல் அப்படியே இயக்க அதிகாரிகள் வற்புறுத்துவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் பலமுறை புகார் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அடிக்கடி சாலைகளில் பேருந்துகள் பழுதாகி நிற்பது குறிப்பிடத்தக்கது.