கோவை : மேட்டுப்பாளையத்தில் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்ட பச்சிளம் குழந்தையின் காலில் ஊசி உடைந்து, தொடை பகுதி உள்ளே சென்றதை கவனிக்காமல் அப்படியே மருத்துவர்கள் அலட்சியமாக விட்டுவிட்டனர் என, குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை : மேட்டுப்பாளையத்தில் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்ட பச்சிளம் குழந்தையின் காலில் ஊசி உடைந்து, தொடை பகுதி உள்ளே சென்றதை கவனிக்காமல் அப்படியே மருத்துவர்கள் அலட்சியமாக விட்டுவிட்டனர் என, குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர் புரம் பகுதியை சேர்ந்தவர் மலர்விழி மற்றும் பிரபாகரன் தம்பதியினர். மலர்விழி கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி பிரசவத்திற்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். பின்னர் அவருக்கு 21 ஆம் தேதி மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனை தொடர்நது, 31 ஆம் தேதி குழந்தைக்கு கை மற்றும் காலின் தொடை பகுதியென இரண்டு தடுப்பூசிகள் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் மூலம் போட்டபட்டுள்ளது. பின்னர் அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பிவைக்கபட்டனர். இந்நிலையில், குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது. அது குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது தடுப்பூசி போட்டால் அப்படி தான் குழந்தை அழும், என கூறி அனுப்பிவிட்டனர். இருப்பினும், குழந்தையின் அழுகை தொடர்ந்து கொண்டே இருந்துள்ளது.
இந்த நிலையில், இன்று காலையில் குழந்தையை பாட்டி தேன்மொழி குளிப்பாட்டிய போது தொடை பகுதிக்கு சோப்பு போட்டுள்ளார். அப்போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. பின்னர் அது குறித்து தடவி பார்த்தபோது தடுப்பூசி போடப்பட்ட பகுதியில் ஊசி ஒன்று உடைந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கபட்டது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவனைக்கு வந்து தலைமை மருத்துவர் இளஞ்செழியன்( பொறுப்பு) அவரிடம் பணியில் அலட்சியமாக இருந்த பணி மருத்துவர் மற்றும் செவிலியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்தனர். மேலும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.
அரசு மருத்துவமனையில் செவிலியர் மற்றும் மருத்துவர்கள் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தையின் உடலில் ஊசி சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.