நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பைக்காரா அணையிலிருந்து இரண்டாம் நாளாக தண்ணீர் திறந்து விடப்பட்டு, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மசினகுடி கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பைக்காரா அணையிலிருந்து இரண்டாம் நாளாக தண்ணீர் திறந்து விடப்பட்டு, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மசினகுடி கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை.கூடலூர், பந்தலூர், நடுவட்டம், அவலாஞ்சி பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஓய்ந்திருந்த தென்மேற்கு பருவமழையின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த மூன்று தினங்கள் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்றது. தொடர்மழை காரணமாக உதகை-கூடலூர் சாலையில் உள்ள பைக்காரா அணை 110 அடி உயர முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக அணைக்கு வரும் உபரி நீர் நேரடியாக திறந்து விடப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி நேற்று காலை அணையில் இருந்து உபரி நீர் வினாடிக்கு 1756 கன அடி திறந்துவிடப்பட்டது. இதேபோல் கிளன்மார்கன் அணையில் இருந்து வினாடிக்கு 1056 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்றும் அதேநிலை நீடிப்பதால் அணையில் இருந்து தண்ணீர் தாெடர்ந்து திறந்து விடப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக முதுமலை புலிகள் காப்பகம் வழியாக செல்லும் மாயாறு, மசினகுடி வழியாக செல்லும் மாயாற்றின் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மசினகுடி பகுதியில் மசினகுடி ஊராட்சி சார்பாக கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை இந்த நிலை தொடரும் என ஊராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.