கோவை : காந்திபுரம் இளங்கோ நகரில் உள்ள ஒரு வீட்டில் மின் கசிவினால் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினரின் முயற்சியால் விரைவாக அணைக்கப்பட்டது.
கோவை : காந்திபுரம் இளங்கோ நகரில் உள்ள ஒரு வீட்டில் மின் கசிவினால் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினரின் முயற்சியால் விரைவாக அணைக்கப்பட்டது.
கோவை காந்திபுரம் அருகே உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் இளங்கோ நகர் உள்ளது, இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.

இந்தநிலையில் இன்று இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள ஜெயா என்பவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து அருகே உள்ள குடியிருப்பு வாசிகள் தீயணைப்பு துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அத்துடன் அப்பகுதி மக்கள் அனைவரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து விரைவாக வந்த தீயணைப்பு துறையினர் வீட்டின் மேற்கூரையிலேயும் உள் பகுதிகளிலேயும் பற்றி எரிந்துகொண்டிருந்த தீயை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி அணைத்தனர்.
மேலும் இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு துறையினரும் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் மின் கசிவே தீ விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

தீ விரைவாக பரவுவதற்கு முன்பாகவே பொதுமக்களும் தீயணைப்புத் துறையினரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் உயிர் சேதங்கள் ஏதும் இன்றி பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.