கோவை : கோவையில் நடைபெறும் செம்மண் கொள்ளையை தடுத்து நிறுத்தாவிட்டால் அரசு அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம் என பாமக இளைஞரணி துணைச் செயலாளர் அசோக் ஸ்ரீநிதி கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
கோவை : கோவையில் நடைபெறும் செம்மண் கொள்ளையை தடுத்து நிறுத்தாவிட்டால் அரசு அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம் என பாமக இளைஞரணி துணைச் செயலாளர் அசோக் ஸ்ரீநிதி கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
கோவை தடாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பல வருடங்களாகவே சட்டவிரோதமாக செம்மண் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது. இந்த செம்மண் கொள்ளை சம்பவம் கடந்த சில வருடங்களாக நவீன இயந்திரங்கள் மூலம் 50 அடி 60 அடி என ஆழத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.இது சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், வனவிலங்குகளின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
இதற்கு காரணமான 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளை மூட வேண்டுமெனவும் சட்டவிரோத செம்மண் கொள்ளையை தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பாமக இளைஞரணி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல செம்மன் கொள்ளையை கண்டும் காணாமல் இருக்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகாரின் படி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர்கள் மீது நீதிமன்றத்தில் நாங்கள் வழக்கு தொடுப்போம் எனவும் பாமகவின் இளைஞரணி துணைச் செயலாளர் அசோக் ஸ்ரீநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது; தடாகம் பகுதியில் நடைபெறும் செம்மண் கொள்ளை தொடர்பாக நாங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகைப்பட ஆதாரங்களுடன் புகாரையும் தகவலையும் கொடுத்துள்ளோம்.
அதேபோல தடாகம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், வீரபாண்டிபுதூர், சோமையம்பாளையம் ஆகிய ஐந்து கிராம பஞ்சாயத்தில் 200க்கும் மேற்பட்ட செங்கற்சூளைகள் அரசு அனுமதியை தாண்டி அதிகமாக மண் எடுப்பில் ஈடுபடுவதையும் புகாராக கொடுத்துள்ளோம்.
அதேபோல அதிகப்படியான மண்ணை எடுப்பதால் அங்குள்ள வன விலங்குகளின் வாழ்வாதாரம் அழிந்து போகிறது.இரு மாதங்களில் நான்கு யானைகள் இறந்துள்ளது.எனவே அரசு உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்கவில்லை என்றால் அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு பதிவும் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.