கோவை : கோவை மாவட்டம் மாங்கரை அருகே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் யானை, 8 மணிநேர சிகிச்சைப் போராட்டத்திற்குப் பிறகு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவை மாவட்டம் மாங்கரை அருகே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் யானை, 8 மணிநேர சிகிச்சைப் போராட்டத்திற்குப் பிறகு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை - ஆனைகட்டி சாலையில் உள்ள மாங்கரை பகுதியில் இன்று அதிகாலை குட்டியுடன் வலம் வந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், வனத்துறையினர் மற்றும் வனத்துறை மருத்துவர்கள் விரைந்து வந்து குட்டியை வனப்பகுதிக்குள் விரட்டியடித்து விட்டு, பெண் யானைக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். தொடர்ந்து, 8 மணி நேரத்திற்கு மேலாகச் சிகிச்சை அளிக்கப்பட்டது. வாழைப்பழம், கால்சியம் உணவுகள் அனைத்தும் கொடுக்கப்பட்டன. இருப்பினும், அதன் உடல்நிலையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து, மாலை 5.30 மணியளவில் பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

"இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் பெண் யானை பாதிக்கப்பட்டிருந்தது. 8 மணி நேரத்திற்கும் மேலாக முடிந்தவரை சிகிச்சை அளித்து போராடினோம். ஆனால், எந்தப் பயனும் அளிக்கவில்லை," என்றார் கோவை மாவட்ட ரேஞ்சர் சுரேஷ்.
இதன் மூலம், இந்த ஆண்டில் தடாகம் பகுதியில் மட்டும் 3 காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.