கோவை : கோவையில் பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் குடிசை அமைத்து போராடிய 18 பேரை போலீசார் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை : கோவையில் பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் குடிசை அமைத்து போராடிய 18 பேரை போலீசார் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாகவே பஞ்சமி நில மீட்பு போராட்டம் அதிகரித்து விடுகிறது. குறிப்பாக, இந்த நிலங்களில் திடீரென பட்டியலின மக்கள் குடிசை அமைத்து குடியேறுகின்றனர். இந்த போராட்டங்களை சில அமைப்புகள் முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில், நேற்று சூலூர் தாலுகா சித்தநாயக்கன் பாளையத்தில் சமூக நீதி கட்சி சார்பில் பஞ்சமி நிலம் மீட்பு போராட்டம் இரவு முழுவதும் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை அக்கட்சியின் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் நடத்தினர். இது தொடர்பாக, சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் இடத்தின் உரிமையாளர் பாலகிருஷ்ணன் புகார் அளித்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தை உடன்படாததையடுத்து, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் தலைவர் பன்னீர்செல்வம், பொது செயலாளர் நாகராஜன் உள்ளிட்ட 19 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 447, 506(2) மற்றும் சி.எல்.ஏ 7(1)( a) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில், 18 பேர் புளியகுளம் அருகே உள்ள நீதிபதி குடியிருப்பில் நீதிபதி வேடியப்பன் முன்னிலையில் ஆஜராகினர். இவர்களை வரும் 12-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட ரத்தக் கொதிப்பால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.