கோவை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பேருந்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்த நபர், கோவையில் பேருந்துக்குள் வைத்து நூதனமாக திருடிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பேருந்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்த நபர், கோவையில் பேருந்துக்குள் வைத்து நூதனமாக திருடிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை ராஜவீதியில் நகைப்பட்டறை நடத்தி வருபவர் அபினய் (41). இவரது நகைப்பட்டறையில் ரவிச்சந்திரன் (55) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் கோவையில் இருந்து சேலத்துக்கு 936 கிராம் நகைகளை தனது பையில் வைத்து சென்றுள்ளார். பின்பு பணிகள் முடிந்து அன்றே மீண்டும் கோவை நோக்கி பேருந்தில் வந்துள்ளார். பேருந்தில் வரும்போது சந்தேகத்துக்குரிய நபர்களின் நடவடிக்கையால் சின்னியம்பாளையம் அருகே தனது பையை சோதனை செய்தார். அப்போது, அதிலிருந்த நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, ரவிச்சந்திரன் தனது உரிமையாளர் அபினய்யிடம் நகைகள் காணாமல் போனது தொடர்பாக தகவல் அளித்தார். பின்னர், உரிமையாளர் அபினய் அளித்த புகாரின் பேரில் பீளமேடு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் உத்தரவின் பேரில், ஆய்வாளர் விவேகானந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சிவகங்கையைச் சேர்ந்த மலைச்சாமி என்பவர் தலைமையிலான திருட்டு கும்பல் இந்த திருட்டில் ஈடுபட்டதும், இவர்கள் நூதனமாக ஒடும் பேருந்தில் 1 ரூபாய் நாணயத்தை சுண்டிவிட்டு பயணிகளின் கவனத்தை திசை திருப்பி திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்த சம்பவங்கள் அனைத்தும் பேருந்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இப்படியிருக்க கோவையில் பேருந்தில் திருடப்பட்ட நகைகளை தங்க கட்டிகளாக மாற்றி மீண்டும் கோவைக்கு அந்த கும்பல் விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, தனிப்படை போலீசார் மலைச்சாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 928 கிராம் தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த திருட்டு சம்பவத்தில் மலைச்சாமியுடன் சீனிவாசபாண்டியன், வீரபாண்டி, பாலமுருகன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.