கோவை : வனப்பகுதிகளை சுரண்டி மணல் திருடுவதை இஸ்ரோவின் உதவியால் வரைபடம் மூலம் கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதன்மூலம் மாஃபியா கொள்ளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
கோவை : வனப்பகுதிகளை சுரண்டி மணல் திருடுவதை இஸ்ரோவின் உதவியால் வரைபடம் மூலம் கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதன்மூலம் மாஃபியா கொள்ளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

ஆனைக்கட்டி சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆராய்ச்சிக் கூடத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் தகவல் & ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று திறந்து வைத்தார்.

தொடர்ந்து, சலீம் அலி ஆராய்ச்சி மைய நிர்வாகிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது :- சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் மிகவும் முக்கியப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியர்கள் இயற்கையை நேசிக்கக்கூடியவர்கள். அதற்கு சில அச்சுறுத்தல்கள் உள்ளது. அதனைச் சார்ந்த ஆராய்ச்சியை இந்த மையம் செய்து வருகிறது. இந்தியாவில் குறிப்பாக 40 மில்லியனாக இருந்த கழுகு இனம் தற்போது 1,000ஆக குறைந்துள்ளது. இது தொடர்பான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தவும், தீர்வுகளுக்கான வழிமுறைகளுக்கு உதவும்.
2021-ல் உலக இடம்பெயர் பறவைகள் மாநாடு இந்தியாவில் நடத்த உள்ளோம். தற்போது மக்களிடையே பறவைகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அழியும் தருவாயில் உள்ள உயிரினங்களை மீட்டெடுக்க பல மாற்றங்களைக் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். புலியின் பெருக்கத்தை இரட்டிப்பாக்கி உள்ளோம். 2023-க்குள் அதை இரட்டிப்பாக்குவோம். யானைகளின் எண்ணிக்கை 30,000மாக இருக்கின்றது.
வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் தண்ணீர் மற்றும் தீவனம் அமைக்க நிதி வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், வன விலங்குகள் ஊருக்குள், விவசாய நிலங்களுக்குள் வருவது தடுக்கப்படும். மேலும், வனப்பகுதியை ஒட்டிய கனிம வளங்களை சுரண்டுவது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இஸ்ரோவின் உதவியால் வரைபடம் மூலம் மணல் எடுப்பதை கண்காணிக்க திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம், மாஃபியா கொள்ளை தடுக்கப்படும், என நம்பிக்கை தெரிவித்தார்.