கோவை : தமிழகத்தில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, மேட்டுப்பாளையத்தில் மோப்ப நாய்களுடன் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கோவை : தமிழகத்தில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, கோவை, மேட்டுப்பாளையம் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மோப்ப நாய்களுடன் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்து அமைப்புகள் சார்பில் கோவை மாவட்டத்தில் 5,000-க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. இதையொட்டி, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை தேவாலயங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் போன்று, தமிழகத்தில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின் போது, தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து ஆறு பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாகவும், மத்திய உளவுத்துறை உஷார்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டத்தை அவர்கள் முக்கிய இலக்காக இருக்கும் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, காவல்துறையினர் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்னரே அனுமதிக்கப்படுகிறது. மேலும், மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் வாகனங்கள், அங்கிருந்து மேட்டுப்பாளையம் வரும் வாகனங்கள் என அனைத்து வாகனங்களையும் மேட்டுப்பாளையம் ஆற்று பாலம் அருகே உள்ள சோதனை சாவடியில் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
நேற்று நள்ளிரவு மேற்கு மண்டலம் காவல்துறை தலைவர் பெரியய்யா தலைமையில், துணைத் தலைவர் கார்த்திகேயன், மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமார், நக்சல் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் மோகன் நிவாஸ் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இதில் மோப்ப நாய்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் மேட்டுப்பாளையம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல, திருப்பூர் மாநகரப் பகுதிகளில் 9 இடங்களிலும், மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் 22 இடங்கள் என மாவட்டத்தின் 31 இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். உளவுத்துறை சார்பில் வெளியிட்டுள்ள வாகன எண்களைக் கொண்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.