கோவை : கோவைப்புதூர் அருகே மாவட்ட ஆட்சியரின் ஓய்வுபெற்ற நேர்முக உதவியாளர் வீட்டில் 10 பேர் கொண்ட கும்பல் சந்தன மரத்தை வெட்டி கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவைப்புதூர் அருகே மாவட்ட ஆட்சியரின் ஓய்வுபெற்ற நேர்முக உதவியாளர் வீட்டில் 10 பேர் கொண்ட கும்பல் சந்தன மரத்தை வெட்டி கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குனியமுத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட கோவைப்புதூர் எக்ஸ் பிளாக்கில் வைத்தியநாதன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் மாவட்ட ஆட்சியரின் ஓய்வு பெற்ற நேர்முக உதவியாளர் காந்தி (72) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வருகிறார். இவர் நேற்று நள்ளிரவு வீட்டின் வெளியே சத்தம் கேட்பதை அறிந்து வெளியே வந்து பார்த்தார்.

அப்போது, சுமார் 10 பேர் கொண்ட கும்பல் வீட்டு வாசலில் இருந்த பழமையான சந்தனமரத்தை இயந்திரம் மூலம் வெட்டி கடத்துவதைக் கண்டு சத்தமிட்டார். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட கடத்தல் கும்பல் வெட்டிய சந்தன மரங்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

பின்னர், காந்தி குனியமுத்தூர் போலிசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில், விரைந்து வந்த குனியமுத்தூர் போலீசார் சந்தன மரம் வெட்டப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் யார்..?, இதற்கு முன்னே சந்தன மரக் கடத்தலில் கைது செய்யப்பட்டவர்களுக்கும், இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா..? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு, குற்றவாளிகளை விரைவாக பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவையில் தொடர்ச்சியாக சந்தன மரக் கடத்தல் கும்பல்கள் மரங்களை வெட்டி செல்வது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.