கோவை : அடுத்த 5 ஆண்டுகளில் ஆட்டோ மொபைல் துறையில் கோவை மிகப்பெரிய இடத்தை பிடிக்கும் என அமைச்சர் சம்பத் உறுதியளித்துள்ளார்.
கோவை : அடுத்த 5 ஆண்டுகளில் ஆட்டோ மொபைல் துறையில் கோவை மிகப்பெரிய இடத்தை பிடிக்கும் என அமைச்சர் சம்பத் உறுதியளித்துள்ளார்.

கோவையில் லட்சுமி மெஷின் ஒர்க்ஸ், போயிங் இன்டியா, லேர்னிங் லிங்க் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து கருவிகள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கல்வி வகுப்புகளை கோவையில் முதல் முறையாக துவக்கியுள்ளது. இந்த வகுப்பில் 30 மாணவர்கள் பயிற்சி பெறவுள்ளனர் . மத்திய அரசின், இந்திய திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் , ’கற்றல் மற்றும் பொருளீட்டுதல்’ முறையில் இது செயல்படுத்தப்படுகிறது. கோவை அரசூர் அருகே உள்ள சங்கோதி பாளையத்தில் ஜி.கே.டி. தொழில்நுட்ப வள நிறுவனத்தில் (GKDITR) நிகழ்ச்சி நடந்தது. விழாவில், அமைச்சர் எஸ்.பி வேலுமணி, தொழில் துறை அமைச்சர் எம்.சி சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். தமிழக அரசின் தொழில் துறை முதன்மை செயலாளர் என்.முருகானந்தம், மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாணவர்கள் மற்றும் தொழில் குழுமங்கள் பங்குபெற்றனர்.

விழாவில் அமைச்சர் எம்.சி சம்பத் பேசியதாவது :-தமிழகத்தில் 500க்கு அதிமான பொறியியல் கல்லூரி தமிழகத்தில் உள்ளது. வருடத்திற்கு 5 இலட்சம் மாணவர்கள் வெளியே வருகிறார்கள். மனிதவளம் அதிகமாக உள்ள மாநிலம் தமிழகம் தான். உலகளவில் 35% சதவீதம் தமிழகத்தை சேர்ந்தவர்கள் விண்வெளி துறையில் வேலைப்பார்த்து வருகிறார்கள். வருங்காலத்தில் டீசல், பெட்ரோல் இல்லாத வாகனங்கள் தான் இயங்கும் என சொல்கிறார்கள். மின்சாரம் மற்றும் வான்வெளி பயணங்கள் அதிகமாக இருக்கும். உலகம் முழுவதும் தமிழகத்தை நோக்கியுள்ளது. சென்னைக்கு அடுத்து கோவைக்கு தான் வாய்ப்பு அதிகம் உள்ளது. நாங்கள் எதிர்பார்ப்பது சென்னைக்கும், கோவைக்கும் பெரியளவில் போட்டியாக உள்ளது. கோவை மீது தமிழக அரசு கண் வைத்துள்ளது. சென்னைக்கு பிறகு பல வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவரவுள்ளோம். கோவை அடுத்த 5 ஆண்டுகளில் ஆட்டோ மொபைலில் மிகப்பெரிய இடத்தை பிடிக்கும். ஆட்டோ மொபைல் மற்றும் ஸ்பேஸ் கருவிகள் தயாரிக்கும் பணியில் தமிழகம் முதலிடத்தில் இருக்கும்.

ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு தமிழக அரசு மிகப்பெரிய உதவியாக இருக்கும். உலகளவில் தமிழக மாணவர்கள் சாதனை செய்து வருகிறார்கள், என்றார். தொடர்ந்து, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியதாவது :- ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏழை, எளிய மக்களுக்கு பயன்பெறும் திட்டங்களை கொண்டு வந்த அரசு ஜெயலலிதா அரசு தான். இந்தியாவிலே முதல் முதலாக மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. மாணவர்களின் டிஜிட்டல் திறனை வளர்த்துக் கொள்ளவும், தொழில்நுட்ப அறிவை பெறவும் இலவச மடிக்கணினி வழங்கியது ஜெயலலிதா அரசு. மத்திய அரசின் மூலம் 3,120 கோடி ரூபாய் பாதுகாப்பு தளங்கள் அமைக்க திட்டம் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டது. கோவையில் தொழில் முதலீட்டார்கள் வருகைக்கு பல வேலைகள் நடந்து வருகிறது. சாலை விரிவாக்கம், பாலங்கள் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இராணுவ தளவாடம் கொண்டு வரப்படவுள்ளது. அப்போது, அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும். கோவை அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனைக்கு நிகராக வளர்ந்துள்ளது. விமான நிலையம் விரிவாக்கம் நடைபெற்று வருகிறது. நிலத்தின் உரிமையாளர்களுக்கு மட்டும் 2 ஆயிரம் கோடி செலவு ஆகிறது. முதற்கட்டமாக 75 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவைக்கு அதிகளவில் தொழிற்சாலைகள் வர வேண்டும், என்று தெரிவித்தார்.
