கோவையில் மதுபோதையில் அதிவேகமாக வாகனத்தை இயக்கி தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய நபர் விபத்தில் சிக்கிய சம்பவம்.
கோவை மாநகரில் இரவு நேரங்களில் மது போதையில் அதி வேகமாக வாகனங்களை ஓட்டி விபத்தை ஏற்படுத்தும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் இரவு நேரங்களில் காவல்துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த சோதனைகள் இருசக்கர வாகனங்களை தாண்டி செல்வதில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று இரவு அதிவேகமாக மதுபோதையில் சொகுசு காரை ஓட்டி வந்த நபர் மூன்று இடங்களில் விபத்துக்களை ஏற்படுத்தி தானும் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
TN 99 H 4338 என்ற எண் கொண்ட சொகுசு கார் சுந்தர பிரசாத் என்பவருக்கு சொந்தமானது.

இந்த நிலையில் இந்த காரை ஓட்டி வந்த நபர் கடைவீதி காவல் நிலையம் அருகே உள்ள ஆட்டோவின் மீது மது போதையில்
மோதியுள்ளார்.
அதைத் தொடர்ந்து அவர் வாகனத்தை நிறுத்தாமல் வாகனத்தை வேகமாக இயக்கி சென்றுள்ளார். இதை கண்ட அப்பகுதி மக்கள் வாகனத்தை இயக்கியவரை பிடிக்கும் வகையில் பின் தொடர்ந்தனர்.
மேலும் பொதுமக்களிடம் தப்பிச் செல்லும் நோக்கில் அதிவேகமாக வாகனத்தை இயக்கி சென்றபோது செல்வபுரம் அருகே மீண்டும் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மீது மோதி உள்ளார்.
மீண்டும் வாகனத்தை நிறுத்தாத அவர் தப்பித்துச் செல்லும் முயற்சியில் அதி வேகமாக இயக்கி சென்றார்.
இதைத் தொடர்ந்து அரசு பேருந்தின் மீதும் மோதியுள்ளார். இதில் வாகனத்தை இயக்கி வந்த நபருக்கு காயம் ஏற்பட்டது.
பின்னர் பொது மக்கள் அவரை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.