கோவை : தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் தரையில் அமர்ந்து கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் தரையில் அமர்ந்து கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய அரசு அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த மசோதாவை கைவிடக்கோரியும் கோவை, சேலம், தேனி, திருச்சி, கன்னியாகுமரி, தர்மபுரி உள்ளிட்ட 9 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் இன்று காலை மருத்துவமனையின் வளாகத்தில் அமர்ந்து மருத்துவ ஆணையத்திற்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தினர். மருத்துவக் கல்வியை கார்ப்பரேட் மயமாக்குவதை கண்டித்தும், வரைவு தேசிய கொள்கை 2019ஐ திரும்பப் பெற வலியுறுத்தியும், நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பதாகைகளை ஏந்தியபடி தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்தின் முன்சென்று தொடர்ந்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்தொடர்ச்சியாக, இன்று இரவும் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் தரையில் அமர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஆண், பெண்கள் என பாகுபாடின்றி அனைத்து பயிற்சி மருத்துவர்களும் ஒன்றாக தங்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காலையில் தொடங்கிய போராட்டம் இரவு வரை நீடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.