கோவை : இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை கொண்டு வரும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.
கோவை : இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை கொண்டு வரும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வை முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வாக (நெக்ஸ்ட்) தேசிய அளவில் நடத்த இந்த மசோதா வழிசெய்கிறது. எனவே, இந்த மசோதாவுக்கு மருத்துவத் துறையில் பெரும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பயிற்சி மருத்துவர்கள் இன்று காலை மருத்துவமனையின் வளாகத்தில் அமர்ந்து மருத்துவ ஆணையத்திற்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தினர். மருத்துவக் கல்வியை கார்ப்பரேட் மயமாக்குவதை கண்டித்தும், வரைவு தேசிய கொள்கை 2019ஐ திரும்பப் பெற வலியுறுத்தியும், நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பதாகைகளை ஏந்தியபடி தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்திற்கு முன்சென்று தொடர்ந்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள் மருத்துவ கல்லூரி மாணவர்கள் என 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறும்போது :- தேசிய மருத்துவ ஆணையத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது. நெக்ஸ்ட் தேர்வை அமல்படுத்தக் கூடாது. வரைவு தேசியக் கல்விக் கொள்கை 2019-ஐ திரும்பப் பெற வேண்டும். போலி மருத்துவர்கள் வளர அரசே துணை நிற்க கூடாது. இதனால், பல உயிரிழப்புகள் ஏற்படும். ஆகவே, எங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல போராட்டங்களை நடத்தி வருகிறோம், என தெரிவித்தார்.