கோவை : கோவையில் நொய்யலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட காட்டுப்பன்றிகளின் சடலத்தினால், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை : கோவையில் நொய்யலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட காட்டுப்பன்றிகளின் சடலத்தினால், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளதால், விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்படைந்தனர். கடந்த 2 நாட்களாக மழை இல்லாத காரணத்தால், நொய்யலாறு வெள்ளம் குறைந்து காணப்படுகிறது.

இந்த நிலையில், நொய்யல் ஆற்றின் கரை ஓரங்களில் விவசாயப் பயிர்களை உண்டும், சேதப்படுத்தி வந்த காட்டுப்பன்றிகள் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
வெள்ளத்தில் பெரும் சகதியும், பெரிய அளவிலான மரங்களும் அதிக அளவில் அடித்து வந்து தொண்டாமுத்தூர் - மாதம்பட்டி செல்லும் வழியில் உள்ள நொய்யலாற்றின் பாலத்தின் அடியில் சிக்கியது. இதனால், அடைப்பு ஏற்பட்டு தீயணைப்பு துறையினர் உதவியுடன் மரங்களை அப்புறப்படுத்தும் பணியும் கடந்த வாரம் நடைபெற்றது. தற்போது, வெள்ள நீர் வடிந்த நிலையில் ஆற்றின் பாலத்தின் அடிப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் செத்து உடல் உப்பிய நிலையில் கிடந்தன.

அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் விசி வரும் காரணத்தால், தொற்று நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் இறந்து கிடக்கும் காட்டுப்பன்றிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.