கோவை : கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீமோகாக்கல் தடுப்பூசி மற்றும் இரத்தநாள அறுவை சிகிச்சை பிரிவு இன்று திறக்கப்பட்டது.
கோவை : கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீமோகாக்கல் தடுப்பூசி மற்றும் இரத்தநாள அறுவை சிகிச்சை பிரிவு இன்று திறக்கப்பட்டது.

நீமோகாக்கல் தடுப்பூசி மற்றும் இரத்தநாள அறுவை சிகிச்சை பிரிவு திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, உலக உறுப்பு தான தினவிழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கான செவிலியர் மாணவிகள் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இதனிடையே, செவிலியர் மாணவிகளிடம் அரசின் மருத்துவ திட்டங்கள் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்விகளை எழுப்பினார். ஆனால், செவிலியர்கள் யாருக்கும் பதில் தெரியாததையடுத்து, செவிலியர் கல்லூரி முதல்வரை வரவழைத்தார். ஆனால், அங்கு வந்த பொறுப்பு முதல்வருக்கும் அமைச்சரின் கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை. தொடர்ந்து, கேள்வி எழுப்பியும் பதில் அளிக்காததால் அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்வர் மீது 17(a) துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது :- இந்தியாவில் முதல் முறையாக 4 கோடி ரூபாய் மதிப்பில் ஒன்றரை கிலோவிற்கு குறைவான எடை கொண்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை கோவையில் துவங்கியுள்ளோம். இது முற்றிலும் இலவசமான திட்டம். கோவை அரசு மருத்துவமனையில் கேத் லேப் துவக்கி வைத்ததின் மூலம் குறுகிய காலத்தில் 2,750 ஆஞ்சியோகிராம் மற்றும் 150 ஒபன் ஹார்ட் சர்ஜரி செய்துள்ளோம். தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் பல்வேறு சரத்துகளை எதிர்க்கிறோம். தமிழகத்திற்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, நெக்ஸ்ட் தேர்வை தமிழக அரசு எதிர்க்கிறது. நாடு தழுவிய அளவில் தமிழகத்தில் தாய் சேய் இறப்பு விகிதம் மிக குறைவாகியுள்ளது, என்றார்.
