கோவை : மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், பவானி ஆற்றுப் பாலத்தில் நின்று பொதுமக்கள் கூடி வேடிக்கை பார்க்கவும், செல்பி எடுக்கவும் கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை : மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், பவானி ஆற்றுப் பாலத்தில் நின்று பொதுமக்கள் கூடி வேடிக்கை பார்க்கவும், செல்பி எடுக்கவும் கோவை மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
கோவை மாவட்டம் மற்றும் மேட்டுப்பாளையம், நீலகிரி போன்ற பகுதிகளில் கடந்த இரு நாட்களாக தென்மேற்கு பருவமழை அதிதீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக, பில்லூர் அணை மொத்த கொள்ளளவான 100 அடியில் 97.5 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு, பின்னர் அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியே 40 ஆயிரம் கன அடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இதனால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கரையோர மக்களுக்கு ஜந்தாவது நாளாக மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வெள்ளப் பெருக்கு காரணமாக மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்ததுடன், சிறுமுகை வச்சினம்பாளையம் பகுதியில் நான்கு வீடுகள் இடிந்து சேதமானது. மேட்டுப்பாளையத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், இன்று மாலை பவானி ஆற்று வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் ஆற்றின் நீர்வரத்து குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பவானி ஆற்று பாலம், சாமண்ணா வாட்டர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கினை பவானி ஆற்றுப் பாலத்தில் நின்று பொதுமக்கள் ஏராளமானோர் கூடி வேடிக்கை பார்ப்பதற்கும், செல்பி எடுக்கவும் தடை விதிப்பதாக அறிவித்தார். இதனை காவல்துறை தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிட்டார். பொதுமக்கள் அதிகமாக கூடி வேடிக்கை பார்ப்பதுடன், செல்பி எடுப்பதால் தவறி ஆற்றில் விழும் நிலை உருவாகும் என்பதால் அதனை தடை செய்வதாக தெரிவித்தார்
பின்னர் செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பேட்டியளித்ததாவது :- கோவை மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்து வருவதால் மேட்டுப்பாளையம், வால்பாறை, சூலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் காரணமாக கால்வாய்கள், ஓடைகளில் இருந்து தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு, 1,300 பேர் திருமண மண்டபங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாதுகாப்பான முறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவருக்கு தேவையான உணவு மற்றும் பால் என அனைத்து அடிப்படை வசதிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. வருவாய் துறையினர், தீயணைப்பு துறையினர் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர், என அவர் தெரிவித்தார்.