கோவை : கோவையில் முதியவர் என்று கூட பாராமல் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் சாலையில் வைத்து தாக்க முற்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவையில் முதியவர் என்று கூட பாராமல் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் சாலையில் வைத்து தாக்க முற்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கோவை கோட்டம் சார்பில் 1,075 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், டவுன் பேருந்துகள் நகர் பகுதியிலும், மப்சல் பேருந்துகள் திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன. இப்படி இயக்கப்படும் பேருந்துகளில் டிக்கெட் பரிசோதனை செய்பவர்கள் பயணிகளிடம் தரக்குறைவாக நடப்பதாக ஏற்கனவே பல புகார்கள் எழுந்து வருகிறது. மேலும், இவர்கள் முதியோர்கள், பெண்கள், சிறுவர்கள் என யாராக இருந்தாலும், எந்தவித மனசாட்சியும் இன்றி தரக்குறைவான வார்த்தைகளை பேசி கடிந்து கொள்வது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில், கோவையில் நேற்று டிக்கெட் பரிசோதனை செய்யும்போது, டிக்கெட் பரிசோதகர் ஒருவர் முதியவர் ஒருவரை காலால் எட்டி உதைக்க முற்பட்ட சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை சுமார் 6.20 மணியளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தின் வெளி பகுதியில் TN 38 N 3002 என்ற எண் கொண்ட 5-ம் நம்பர் பேருந்தில் இருந்து தனது மனைவி மற்றும் உறவினருடன் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கே வந்த டிக்கெட் பரிசோதகர் உடுமலை ரவி முதியவரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு, அவர் தனது மனைவியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அப்போது, டிக்கெட் பரிசோதகர் நான் ஒரு செக்கிங் இன்ஸ்பெக்டர் என்னிடம் எப்படி பேச வேண்டும் என்று உனக்கு தெரியாதா..? எனக் கூறி முதியவரை மிரட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து, அருகே இருந்த முதியவரின் உறவினர் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என கேட்டதற்கு முதியவரை காலால் எட்டி உதைக்க முற்பட்டுள்ளார்.

மேலும், முதியவரை தாக்கிவிட்டு அவரை மதுபோதையில் உள்ளார் என குற்றம் சாட்டினார். இந்த டிக்கெட் பரிசோதகரின் மனிதாபிமானமற்ற செயல்கள் அனைத்தையும் அந்த பகுதியில் இருந்த பத்திரிக்கையாளர்கள் படம் பிடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, பத்திரிக்கையாளர்கள் முதியோர் என்றும் பாராமல் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என டிக்கெட் பரிசோதகரிடம் கேட்டதற்கு, நான் ஒரு அரசு அதிகாரி என்னிடமே கேள்வி கேட்கிறீர்களா..? என பத்திரிக்கையாளரையும் மிரட்டியுள்ளார்.

பின்னர், பிரச்சனை திசை மாறுவதை அறிந்து கொண்ட டிக்கெட் பரிசோதகர் அந்த பகுதியில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டார்.
இதைத் தொடர்ந்து, பத்திரிக்கையாளர்கள் டிக்கெட் பரிசோதகரின் நடவடிக்கை குறித்து பேருந்து நிலையத்தில் உள்ள அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

ஆனால், அந்த அதிகாரிகள் உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என அதிகார தொனியில் மிரட்டியுள்ளனர். இந்த சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேவை நிறுவனத்தில் பணிபுரியும் சில டிக்கெட் பரிசோதகர்களும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களும் பொதுமக்களுக்கு சேவையாக இந்தப் பணியை செய்யாவிட்டாலும், அவர்களின் கண்ணியத்தை கலங்கப்படுத்தாமல் இருந்தாலே போதும் என பொதுமக்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.