கோவை : மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து 18,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கோவை : மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து 18,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கன மழைபெய்து வருவதாலும், பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, பில்லூர் அணைக்கான நீர்வரத்து 16,000 கன அடியாக உயர்ந்துள்ளது. 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர் மட்டம் தற்போது 98 அடியை எட்டியுள்ளது. எனவே, அணையின் பாதுகாப்பு கருதி சுமார் 18,000 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் உபரியாக திறக்கப்பட்டுள்ளது.

அணையின் நான்கு மதகுகள் வழியாக 18,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பவானி ஆற்றில் வெள்ளம் இரு கரையும் தொட்டவாறு கரைபுரண்டு ஓடுகிறது.

மேட்டுப்பாளையம் நகர பகுதியில் ஆற்றை ஒட்டியுள்ள பவானி அம்மன் கோவில் தண்ணீர் சூழந்து காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தபட்டுள்ளது.

மேலும், இந்த வெள்ளத்தில் மலைப்பகுதிகளில் இருந்து ராட்சத மரங்கள் நீரின் வேகம் காரணமாக வேரோடு சாய்த்து அடித்து வரபட்டுள்ளதாலும், மலைவாழ் மக்களின் சில உடமைகளும் அடித்து வரபட்டுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
மேட்டுப்பாளையம், ஆலாங்கொம்பு, கிச்சகத்தியூர், லிங்காபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளதுடன், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் தாழ்வான பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களுக்கு எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தி வருவதுடன், நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்க தீயணைப்பு துறையினர் போதிய உபகரணங்களுடன் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஆற்றின் நீர்வரத்து மேலும் உயரும் என்பதால், வருவாய்த்துறையினர் போதிய முன் ஏற்பாடுகளை செய்து வருவதாக மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சாந்தாமணி தெரிவித்துள்ளார்.