கோவை : கோவை டவுன்ஹாலை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் சாலையில் சண்டையிட்டுக்கொள்ளும் மாடுகளால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்
கோவை : கோவை டவுன்ஹாலை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் சாலையில் சண்டையிட்டுக்கொள்ளும் மாடுகளால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கோவையில் உள்ள டவுன்ஹால், வைசியாள் வீதி, காந்திபார்க், உக்கடம், ராஜவீதி உள்ளிட்ட பகுதிகளில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அதேபோல, இந்த பகுதிகளில் துணிக்கடைகள், நகைக்கடைகள், காய்கறி மார்க்கெட்டுகள் என பல வியாபாரங்கள் நடைபெறுவதால், இங்கு காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை பொதுமக்களின் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இப்படி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த சாலைகளின் நடுவே அடிக்கடி மாடுகள் வலம் வருவது அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், திடீரென ஓடிவரும் மாடுகளால் சாலை விபத்துகளும் ஏற்படுகிறது. இது தொடர்பாக பல புகார்கள் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மாட்டு சண்டை மைதானம் ஆகி வரும் சாலைகள் :-
கடந்த 11-ம் தேதி சுமார் 11:30 மணி அளவில் சுக்கிரவார்பேட்டை பசுவண்ணன் கோயில் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு மாடுகள் திடீரென சண்டையிட்டுக் கொண்டன. மேலும், இந்த மாடுகள் இரண்டும் சாலையில் நகர்ந்தபடி ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டன. இதைக்கண்ட அருகே இருந்த வியாபாரிகள் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய மாடுகளை பிடிக்க முற்பட்டனர். மேலும், தண்ணீரை ஊற்றியும் குச்சியால் அடித்தும் சுமார் 20 நிமிடத்திற்கு மேல் போராடி சண்டையை பிரித்தனர். இந்த சம்பவத்தால் சுமார் அரை மணி நேரம் சுக்கிரவார்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், அதேபோல நேற்று இரவு சுமார் 9 மணியளவில் வைசியாள் வீதி பி1 காவல்நிலையம் அருகே மீண்டும் இரண்டு மாடுகள் சாலையின் நடுவே சண்டை இட்டுக்கொண்டன. மேலும், இந்த சண்டையிட்ட மாடுகள் வாகனங்களின் மீது மோதுவது போலவும் வந்தன. இதனால், பணி முடிந்து சாலையில் சென்று கொண்டிருந்த பெண்கள், இந்த மாட்டு சண்டையால் பயந்தபடி சாலையின் ஓரங்களில் நின்றனர். சுமார் 20 நிமிடத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த சண்டையால் வைசியாள் வீதி சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சாலை விபத்துகளுக்கு வழிவகுக்கும் மாடுகள் :-
சாலையில் நடமாடும் இந்த மாடுகள் திடீரென வாகனங்களில் புகுந்து விடுகிறது. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த மாடுகளினால் விபத்துக்கு உள்ளாகியுள்ளனர். கிட்டத்தட்ட சாலையில் செல்பவர்கள் மீது மாடு முட்டியதில் இந்த ஆண்டில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறிப்பாக, கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த சபீர் என்பவர் தனது குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பொழுது சாலையின் நடுவே சண்டையிட்ட மாடுகள் மோதியதில் இருவரும் காயமடைந்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் அளித்த புகாரின் பேரில், 21ஆம் தேதி மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாடுகளை பிடித்துச் சென்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் சிராஜ்தீன் கூறும்போது ;-கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில் சாலை நடுவே அடிக்கடி மாட்டுச் சண்டை நடைபெறுகிறது. இப்படி சண்டை நடைபெறும் பொழுது பொதுமக்களாகிய நாங்கள் சாலையில் பயணிப்பது மிக கடினமாக உள்ளது. ஏற்கனவே, போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ள நிலையில், மாடுகளின் இந்த சண்டையால் மேலும் நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த மாடுகள் திடீரென வாகனங்களின் மீது மோதுகிறது. இதனால், சாலை விபத்துகளும் நேரிடுகிறது. ஆகவே, மாநகராட்சி அதிகாரிகளும், காவல்துறையினரும் இணைந்து சாலையில் நடமாடும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை முறைப்படுத்த வேண்டும். இல்லையெனில், இது ஒரு நாள் பெரிய விபத்தை ஏற்படுத்தும், என தெரிவித்தார்.