கோவை : சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவியின் நகையை பேருந்தில் வைத்து திருடிய சம்பவத்தில் தொடர்புடைய இரு பெண்கள், மற்றுமொரு பேருந்து ஜேப்படி சம்பவத்தில் ஈடுபட்ட போது கையும் களவுமாக பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை : சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவியின் நகையை பேருந்தில் வைத்து திருடிய சம்பவத்தில் தொடர்புடைய இரு பெண்கள், மற்றுமொரு பேருந்து ஜேப்படி சம்பவத்தில் ஈடுபட்ட போது கையும் களவுமாக பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சின்னசாமியின் மகள் நிஷா (20). இவர் கோவை அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த மூன்றாம் தேதி தனியார் பேருந்தில் அண்ணா சிலை பேருந்து நிறுத்தத்தில் இறங்க சின்னியம்பாளையம் பகுதி பேருந்து நிறுத்தத்தில் ஏறினார். இதில், பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் மாணவி படியில் நின்றபடி பயணித்தார். பின்னர், பேருந்தானது ஹோப்ஸ் சிக்னல் அருகே வந்தபோது, கழுத்தில் இருந்த இரண்டே கால் பவுன் தங்க நகையை காணாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, மாணவி அவரது அருகே சந்தேகத்துக்கிடமாக இருந்த 2 பெண்கள் குறித்த தகவலை பீளமேடு குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில், இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று காலை சந்தேகத்துக்குரிய இரண்டு பெண்கள் வேறொரு பேருந்தில் நகை திருடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டு சந்தேகத்துடன் விசாரிக்கப்பட்டு வந்தனர். அப்போது, அந்தப் பகுதிக்கு சென்ற மாணவி நிஷா, சந்தேகத்துக்குரிய பெண்களை நகை கொள்ளையர்கள் என பொதுமக்கள் முன்பு உறுதிப்படுத்தி, இவர்களை விடக்கூடாது என வலியுறுத்தியபடி, காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

பின்னர், தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில், திருச்சி சமயபுரம் பகுதியைச் சேர்ந்த அலமேலு (45), அம்பிகா (27) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளதும், சட்டக்கல்லூரி மாணவியிடம் இருந்து நகையை இலாவகமாக பறித்ததையும், அதேபோல பேருந்தில் வைத்து 7,000 ரூபாய் பணத்தை திருடியதையும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து, இவர்கள் இருவரையும் போலீசார் பீளமேடு குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த பேருந்து நகை கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் பெண்களை இரு கோணங்களில் பொதுமக்களும், சட்டக்கல்லூரி மாணவியும் இணைந்து பிடித்த சம்பவம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.