கோவை : கணபதியை அடுத்த ராமகிருஷ்ணாபுரம் வாரச்சந்தையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், எனவே அதனை ஆய்வு செய்து அகற்றிட நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டது.
கோவை : கணபதியை அடுத்த ராமகிருஷ்ணாபுரம் வாரச்சந்தையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், எனவே அதனை ஆய்வு செய்து அகற்றிட நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டது.

கோவை - சத்தி சாலையில் உள்ள கணபதி ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. இந்த வார சந்தையில் புத்தர் வீதி, சாரதாதேவி வீதி, விவேகானந்தர் வீதி போன்ற 10-க்கும் மேற்பட்ட வீதிகளில் சாலையை மறித்து, வாகனங்களை நிறுத்துவதால் அங்கு வசிப்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாவதாகவும், இதனை ஆய்வு செய்து சந்தை கடைகளை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் கூறி அப்பகுதி நலசங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், "350-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சாலை ஓரங்களிலும் கடை அமைப்பதால் சத்தி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், இங்கு வாரச்சந்தை கடை போடுபவர்கள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துவதோடு மட்டுமல்லாமல், இயற்கை உபாதைகள் கழித்தும் மீதமாகும் காய்கறிகளை சாக்கடையில் கொட்டியும் சுகாதார சீர்கேட்டை உருவாக்குகின்றனர். மாநகராட்சி அனுமதி இல்லாமல் இங்கு பலர் கடை நடத்துகின்றனர். அதில் ஒரு சிலர் சட்டத்திற்கு புறம்பாக வசூல் செய்து வியாபாரம் செய்ய அனுமதிக்கின்றனர். இதனை ஆய்வு செய்து சந்தை கடையை அகற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்," என வலியுறுத்தினர்.