கோவை : சமூகவலைதளங்கள் மூலமாக தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் சில இளைஞர்கள் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பீளமேடு, உக்கடம், கரும்புக்கடை ஆகிய 3 இடங்களில் மாநகர போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை : சமூகவலைதளங்கள் மூலமாக தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் சில இளைஞர்கள் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பீளமேடு, உக்கடம், கரும்புக்கடை ஆகிய 3 இடங்களில் மாநகர போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் இளைஞர்கள் சிலர் முகநூல் வாயிலாக தொடர்பில் இருப்பதாக வந்த தகவலின் பேரில் தொடர் சோதனைகள் நடைபெற்றது. இந்த சோதனைகளின் ஒரு பகுதி தேசிய புலனாய்வு முகமையினரும், மற்றொரு பகுதி மாநகர போலீசாரும் ஈடுபட்டனர். இந்த சோதனைகளின் முடிவில் கிடைத்த ஆதாரங்களின் பேரில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர், மாநகர நுண்ணறிவு போலீசார் தொடர்ந்து சந்தேகத்துக்குரிய சில நபர்களின் முகநூல்களைக் கண்காணித்து வந்துள்ளனர். அதேபோல, ஏற்கனவே குற்ற சம்பவங்களில் தொடர்புடைய நபர்களையும் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், தடை செய்யப்பட்ட இஸ்லாமிய இயக்கத்தினருடன் சமூக வலைதளங்கள் மூலம் கோவையைச் சேர்ந்த சிலர் தொடர்பில் இருப்பதாக கோவை மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மாநகர போலீசார் இன்று மூன்று குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். இதில், அர்ஜுன் சம்பத்தை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட கரும்புக்கடையை சேர்ந்த ஆட்டோ பைசல் என்பவரது வீட்டிலும், திராவிடர் விடுதலை கழகத்தின் நிர்வாகி ஃபாரூக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவரது வீட்டிலேயும், பீளமேடு பகுதியில் முகம்மது புர்கான் என்பவரது வீட்டிலும் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. அதில், சதாம் உசேன் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில், 1 செல்போன், 2 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய இருவர் வீட்டில் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய இந்த இளைஞர்களின் வீட்டில் நடைபெற்று வரும் சோதனையின் முடிவிலேயே மாநகர போலீசின் திடீர் சோதனை குறித்த முழு தகவல்கள் கிடைக்கும்.