திருப்பூர் : வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் பிராந்திய மொழியில் தபால் எழுத்தர் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தமிழகத்திற்கும் பிராந்திய மொழியில் தேர்வுகள் நடத்த வலியுறுத்தப்படும் என பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் : வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் பிராந்திய மொழியில் தபால் எழுத்தர் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தமிழகத்திற்கும் பிராந்திய மொழியில் தேர்வுகள் நடத்த வலியுறுத்தப்படும் என பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வானது திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- பிரதமர் மோடி மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்து இளைஞர்கள் அதிக அளவில் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். தேர்தல் தோல்வி சற்று சோர்வை கொடுத்து இருந்தாலும், உறுப்பினர் சேர்க்கை நம்பிக்கை அளிக்கிறது. அடுத்த ஒரு மாதத்திற்கு உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சம் உறுப்பினர் சேர்க்கை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு சட்டத்தை வலுப்படுத்தி மிக குறுகிய காலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடங்களையும் அரசு வழங்க வேண்டும். தொலைநோக்கு பார்வையுடன் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். அதே போல், தபால் நிலைய எழுத்தர் பணி தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என்ற நிலையில், ஒரு சில வடகிழக்கு மாநிலங்களில் பிராந்திய மொழியில் தேர்வுகள் நடத்தப்பட்டால், தமிழகத்திலும் பிராந்திய மொழியில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்படும். மத்திய அரசின் கவனத்திற்கு இந்த விஷயத்தை கொண்டு செல்வோம், எனக் கூறினார்.