கோவை : காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே சி-1 காட்டூர் காவல் நிலைய காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 200 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டதற்கான துவக்கவிழா நடைபெற்றது.
கோவை : காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே சி-1 காட்டூர் காவல் நிலைய காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 200 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டதற்கான துவக்கவிழா நடைபெற்றது.

கோவை மாநகரில் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல், கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்தவும், குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைவாக கைது செய்யவும், 'மூன்றாம் கண்' என சொல்லப்படுகிற கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியை மாநகர காவல்துறையினர் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.

இந்த கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியானது. மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரணின் உத்தரவின் பேரில் மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணனின் வழிகாட்டுதலில் நடைபெற்று வருகிறது.
இதில், முதற்கட்டமாக ஆர்.எஸ்.புரத்தில் துவங்கி பீளமேடு காவல் எல்லை, சாய்பாபா கோவில் காவல் எல்லை என கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இப்படி மாநகரம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் அமைக்கும் பணியை காவல்துறையினர் குடியிருப்பு சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் உதவியுடன் பொருத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது சி-1 காட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 200 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காந்திபுரம் பேருந்து நிலையங்கள், சக்தி சாலை, ஆவாராம்பாளையம் சாலை, ஜி பி சிக்னல், 100 அடி சாலை என மக்கள் நடமாடும் பல்வேறு பகுதிகளில் எளிதில் அடையாளம் காணும் அதிநவீன கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டதற்கான துவக்க விழாவும், புனரமைக்கப்பட்ட சி-1 காட்டூர் காவல் உதவி மையம் திறப்பு விழாவும் காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

இந்த துவக்கவிழா நிகழ்வில் மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண், மாநகர காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன், உதவி ஆணையாளர் எழிலரசு, நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையாளர் வெற்றிச்செல்வன் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்ட காட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார், ஸ்ரீதேவி சில்க்ஸ் உரிமையாளர் சிவா மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.