கோவை : காந்திபார்க் அருகே உள்ள சுக்கிரவார்பேட்டை பகுதியில் சாலையை மறித்து சண்டை போட்டுக் கொண்ட மாடுகளால் சுமார் 20 நிமிடத்த்திற்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோவை : காந்திபார்க் அருகே உள்ள சுக்கிரவார்பேட்டை பகுதியில் சாலையை மறித்து சண்டை போட்டுக் கொண்ட மாடுகளால் சுமார் 20 நிமிடத்த்திற்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோவை காந்திபார்க் பகுதியில் தொடங்கி உக்கடம், ராஜவீதி போன்ற மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் சாலைகளின் நடுவே ஆடு, மாடுகள் நடமாடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது என பல புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. மேலும், சாலையில் நடமாடும் மாடுகளால் திடீர் விபத்துக்களும், பல்வேறு பாதிப்புகளும் எழுகிறது. குறிப்பாக, காலை நேரங்களில் அவசரம் அவசரமாக பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் தங்கள் பணிகளுக்கும் செல்பவர்கள் இந்த சாலைகளை கடக்கும் பொழுது போக்குவரத்து பாதிப்பினால் சிரமம் அடைகின்றனர். இது தொடர்பாக பல புகார்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை வழக்கம்போல சாலையில் வலம் வர விட்டுவிடுகின்றனர்.
இந்த நிலையில், நேற்று காலை சுமார் 11.30 மணி அளவில் சுக்கிரவார்பேட்டை பசுவண்ணன் கோயில் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு மாடுகள் திடீரென சண்டை இட்டுகொண்டன. மேலும், இந்த மாடுகள் இரண்டும் சாலையில் நகர்ந்தபடி ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டன. இதைக்கண்ட அருகே இருந்த வியாபாரிகள் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய மாடுகளை பிடிக்க முற்பட்டனர். மேலும், தண்ணீரை ஊற்றியும் குச்சியால் அடித்தும் சுமார் 20 நிமிடத்திற்கு மேல் போராடி சண்டையை பிரித்தனர். இந்த சம்பவத்தால் சுமார் அரை மணி நேரம் சுக்கிரவார்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோவையில் சாலையில் சென்று கொண்டிருந்த மாடுகள் திடீரென ஒன்றோடொன்று மோதிக்கொண்ட சம்பவம் காண்போரை வியப்பில் ஆழ்த்தினாலும், மறுபுறம் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் அதிருப்தியை ஏற்படுத்தியது.