கோவை : கி.பி. 13-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட துடியலூரையடுத்த வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.
கோவை : கி.பி. 13-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட துடியலூரையடுத்த வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.

கோவை துடியலூர் அடுத்துள்ள வடமதுரை ஸ்ரீவிருந்தீஸ்வரர் கோவில் கி.பி. 13-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. சுந்தரமூர்த்தி நாயனார் மிகுந்த பசியுடன் இக்கோவிலை அடைந்தபோது, சிவபெருமான் அன்னத்தையும், முருங்கை பயிரையும் சேர்த்து சமைத்து பசியாற்றி, அருட்காட்சி தந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த நிலையில், சிதிலமடைந்திருந்த இந்த கோவிலிலுள்ள ஸ்ரீ கன்னிமூல கணபதி, ஸ்ரீ விருந்தீஸ்வரர், ஸ்ரீ விஸ்வநாயகி அம்மாள், ஸ்ரீ சுப்ரமண்யர், ஸ்ரீ லக்ஷ்மிநாராயண பெருமாள், ஸ்ரீ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ சூரியன், ஸ்ரீ சந்திரன், ஸ்ரீ நவநாயகர்கள், ஸ்ரீ சனிஸ்வரன், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ அதிகார நந்தி, ஸ்ரீ உற்சவ மூர்த்திகள், ஸ்ரீ காலபைரவர் பரிவாச சன்னதிகளுக்கும், பரிவார விமானங்களுக்கும் சிற்ப சாஸ்திரி முறைப்படி புனரமைக்கும் பணியும், வண்ணம் பூசும் பணியும் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக ராஜ அலங்காரத்துடன் கூடிய யாக சாலைகள், வரும் பக்தர்களுக்கு அன்னதானம் கூடாரங்கள், வாகனங்களை நிறுத்த 10 ஏக்கர் கோவில் இடத்தில் ஏற்பாடு என அனைத்து வேலைகளும் செய்யப்பட்டு இருந்தன. மேலும், கோவில் கருவூலம் மற்றும் நடராஜர் மண்டபத்தின் உள்பகுதியில் தங்கம் முலாம் பூசப்பட்ட தகிடுகள் பதிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஜூலை 7-ம் தேதி காலை 9 மணிக்கு கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து 8ம் தேதி முதல் கால யாக பூஜையும், 9ம் தேதி 2 மற்றும் 3ம் கால பூஜையும் ,10-ம் தேதி 4 மற்றும் 5ம் கால பூஜையும், இன்று அதிகாலை 6-ம் கால யாக பூஜையும் நடைபெற்றன.

அதன் பின்பு, கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் சிவஞானகுரு 57-ம் குருமகா சன்னிதானம் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ராஜ சரவண மாணிக்கவாசக குருஸ்வாமிகள், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபரசுவாமிகள், பிள்ளையார் பீடம் பொன்.மாணிக்கவாசக சுவாமிகள் முன்னிலையில் காலை 9 மணியளவில் யாக பூஜைகளில் இருந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ஸ்ரீ கன்னிமூல கணபதி, ஸ்ரீ விருந்தீஸ்வரர், ஸ்ரீ விஸ்வநாயகி அம்மாள், ஸ்ரீ சுப்ரமண்யர், ஸ்ரீ லக்ஷ்மிநாராயண பெருமாள் ஆகிய தெய்வங்களின் கருவறை கோபுரங்களில் உள்ள விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து, மூல மூர்த்திகளுக்கு அலங்கார பூஜை மற்றும் அபிஷேகப் பூஜைகள் ஆகியவை நடைபெற்றது. மாலை திருக்கல்யாண உற்சவம், திருவீதியுலா ஆகியன நடைபெற்றது. யாகபூஜைகள் மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை காரமடை ஞானசுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் வடமதுரை ஸ்தல அர்ச்சகர் தயாநிதி சிவாச்சாரியார் மற்றும் 100-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர். பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி தேவஸ்தானம் வெங்கடேசன் குழுவினர் திருமுறை ஓதுவார் நிகழ்ச்சியை நடத்தினர்.
கும்பாபிஷேக விழாவில் துடியலூர், வடமதுரை, உருமாண்டம்பாளையம், வெள்ளகிணர், பன்னிமடை, இடிகரை, பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், சின்னதடாகம், கணுவாய், ஆனைக்கட்டி உட்பட பல ஊர்களை சேர்ந்த கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, பஜனை குழுவினரின் பாடல்கள், காளப்பட்டி பையா கவுண்டர் குழுவினரின் ஜமாப் நிகழ்ச்சி, மங்கையர்கரசி சொற்பொழிவு என நாள் முழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழக அரசால் கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல சிறப்பு பேருந்து வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது. மேலும், காவல்துறை, வனத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.