கோவை : சரவணம்பட்டி அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின் போது, விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களில், முதற்கட்டமாக ஒருவரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீட்டுத் தொகையை தேசிய துப்புரவு நல்வாழ்வு ஆணைய உறுப்பினர் வழங்கினார்.
கோவை : சரவணம்பட்டி அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின் போது, விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களில், முதற்கட்டமாக ஒருவரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீட்டுத் தொகையை தேசிய துப்புரவு நல்வாழ்வு ஆணைய உறுப்பினர் வழங்கினார்.
கோவை மாவட்டம் கீரணத்தம் பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் தேதி சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான பன்றி வளர்ப்பு மற்றும் இறைச்சி கூட கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய ராஜப்பன், வேடியப்பன் மற்றும் மற்றொரு வேடியப்பன் சென்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து, இடத்தின் உரிமையாளர் சுப்பிரமணியம் கோவில்பாளையம் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், விஷவாயு தாக்கி உயிரிழந்த குடும்பத்தினரை அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்த துப்புரவு நல்வாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மேணி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர், சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, விஷவாயு தாக்கி இறந்த 3 பேரின் குடும்பத்திற்கு ஊராட்சி பொதுநிதியில் இருந்து ரூ. 30 லட்சம் ரூபாயை வழங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்தார். முதற்கட்டமாக, இறந்த ராஜப்பன் மனைவி சுந்தரியிடம் ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை தேசிய துப்புரவு நல்வாழ்வு ஆணைய உறுப்பினர் வழங்கினார். விஷவாயு தாக்கி இறந்த இரு வேடியப்பன்களின் சான்றிதழ்கள் கிடைத்தவுடன், ஓரிரு நாளில் அவர்களின் குடும்பத்தாரிடம் நிதியுதவி வழங்க இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாநகர சட்டம் ஒழுங்கு காவல்துறை துணை ஆணையர் பாலாஜி சரவணன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.