காணாமல்போன சூழலியல் ஆர்வலர் முகிலன் ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காணாமல்போன சூழலியல் ஆர்வலர் முகிலன் ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் முகிலன்.

அப்போது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த வன்முறையில் பொதுமக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும், போலீஸ் உயர் அதிகாரிகள்தான் வன்முறைக்கு காரணம் என்று கூறி, அதுதொடர்பான ஆதாரங்களை வெளியிட்டார்.
இதற்கு மறுநாள் எழும்பூரில் இருந்து மதுரைக்கு ரயிலில் சென்ற அவர், இரவு 10.30 மணிக்கு நண்பர்களுடன் போனில் பேசினார், அதன்பின் அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. அவர் காணாமல் போய் 150 நாட்கள் நெருங்கி வரும் நிலையில், அவரை கண்டுபிடித்து ஒப்படைக்கக் கோரும் மனு மீது உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. சில ஆதாரங்களை சீலிட்ட கவரில் உயர் நீதிமன்றத்தில் அளித்தது. அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில் காணாமல் போன முகிலனை திருப்பதியில் பார்த்ததாக அவரது பள்ளித்தோழர் சண்முகம் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரிடம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இரவு சுமார் 7 மணியளவில் திருப்பதி ரயில் நிலையத்தில் ரயில் நின்றுள்ளது. அப்போது, சண்முகம், சாமி கும்பிடுவதற்காக பிளாட்பாரத்தில் இறங்கி உள்ளார். அப்போது, முகிலனை மூன்று காவலர்கள் பிடித்து அழைத்துச் சென்றதை பார்த்ததாகவும், அவர்கள் நடுவே அவர் முழக்கமிட்டு சென்றதை பார்த்துள்ளார்.
தமிழகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தேடி வருவதால் உடனடியாக அவர் இதுகுறித்து சென்னைக்கு தகவல் சொன்னதாகவும், இதையடுத்து, அவரது தகவலை வைத்து சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் ஆந்திர போலீஸாரிடம் பேசி வருகின்றனர்.

இதனிடையே, திருப்பதியில் போலீஸ் பிடியில் தாடி மீசையுடன் முகிலன் கோஷமிட்டப்படி செல்லும் காணொலி வெளியாகி உள்ளது. ஆகவே, பிடிபட்டது முகிலன் தான் என்பது நிரூபணமாகியுள்ளதாக தெரிகிறது.