கோவை : அதிகாலை வேளையில் வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம் மற்றும் சிங்காநல்லூர் குளங்களை கடந்து செல்லும் போது, சில மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருப்பதை கட்டாயம் காண முடிகிறது.
கோவை : அதிகாலை வேளையில் வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம் மற்றும் சிங்காநல்லூர் குளங்களை கடந்து செல்லும் போது, சில மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருப்பதை கட்டாயம் காண முடிகிறது.
நாள்தோறும் குறைந்தபட்சம் 10 முதல் 15 மீனவர்கள் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பர். சிங்காநல்லூர் குளத்தில் மீன்பிடிக்க தடையும், மற்ற இரு குளங்களில் மீன் பிடிப்பதற்கான உரிமம் கடந்த 2018 டிசம்பருடன் காலாவதியாகிவிட்ட நிலையிலும், மீனவர்கள் தடையை மீறி தொடர்ந்து மீன் பிடித்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள குளங்களில் மீன்பிடிக்கும் ஒப்பந்தத்திற்கான ஏலத்திற்கு கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்ட நிலையில், மீன்பிடிக்க உரிமம் பெற்ற மீனவர்களின் உரிமத்தை புதுப்பிக்கவோ, புதிய உரிமம் வழங்கவோ அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறியதாவது :- மீன்பிடிப்பதால் குளத்தின் சுற்றுச்சூழலின் நிலைத்தன்மை சரிவதோடு மட்டுமல்லாமல், குளத்தின் நீர்வரத்தும் மாறுபடுகிறது. கோவையில் உள்ள குளங்களில் மீன் பிடிக்க ஒப்பந்தம் எடுத்தவர்கள் குளப்பகுதிகளையும், சுற்றுச்சூழலையும் கடுமையாக சேதப்படுத்தியுள்ளனர். சிங்காநல்லூர் குளத்தில் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட தடையைப் பொருட்படுத்தாமல், ஒப்பந்ததாரர்கள் விதிகளை மீறி மீன்பிடிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த குளத்தில் பிடிக்கப்படும் மீன்களை, குளத்தின் நுழைவுப் பகுதியிலேயே விற்பனை செய்கின்றனர், என்றார்.
சிங்காநல்லூரில் மீன்பிடிப்பதற்கான ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவு பெற்றுவிட்டதாகவும், குளத்தின் பல்லுயிர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இனி ஒப்பந்ததை புதுப்பிக்கக் கூடாது என கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, சிங்காநல்லூர் குளம் கோவை மாநகரட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இங்கு மீன்பிடிப்பதற்கான ஒப்பந்தங்களை மாவட்ட நிர்வாகமும், மீன்வளத்துறையும் மேற்கொள்கிறது. எனவே, நிர்வாக முறையில் நிலவும் குழப்பத்தால், விதிமீறல்கள் கண்டுகொள்ளப்படாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இத்கு தொடர்பாக கோவை மாநகராட்சி மூத்த அதிகாரி கூறியதாவது :- உள்ளூர் மீனவர்களுக்கான ஒப்பந்த உரிமம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்த நிலையிலும், மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடித்து வருவது உண்மைதான். சிங்காநல்லூர் குளத்தில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடிப்பதற்கான உரிமத்தை மாவட்ட நிர்வாகம் வழங்கி வரும் நிலையில், பராமரிப்பு பணிகளி கோவை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் விதிகளை கடைபிடிப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர். இருப்பினும், விதிகளை மீறி செயல்படுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் கோவை மாநகராட்சி சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது, எனக் கூறினார்.
மேலும், மீன்பிடி தொழிலால் குளத்திற்கு வருகை தரும் பறவைகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இங்கு வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் மீன்பிடி வலைகளில் சிக்கி வாழ்வை இழக்கின்றன. இதனால், கோவைக்கு வரும் வெளிநாட்டு பறவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. எனவே, தடையை மீறி குளங்களில் மீன்பிடிக்கப்படுவதை கோவை மாநகராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.