கோவை : மேட்டுப்பாளையத்தில் அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய கோரி மருத்துவமனை முன்பு செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : மேட்டுப்பாளையத்தில் அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய கோரி மருத்துவமனை முன்பு செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குட்டையூர் பகுதியைச் சேர்ந்த ருக்மணி மற்றும் அவரது கணவர் ராஜன் நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த போது, லாரியில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயமடைந்த ருக்மணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த நிலையில், ருக்மணி உயிரிழப்புக்கு மருத்துவர்களும், செவிலியர்களும் உரிய சிகிச்சை அளிக்காததே காரணம் எனக் கூறி மருத்துவமனை செவிலியர் மற்றும் மருத்துவரை அவரது உறவினர்கள் தாக்கினர். மேலும், மருத்துவமனையை சூறையாடினர். இது தொடர்பான சி.சி.டிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அவரசர சிகிச்சை பிரிவில் உள்ள கண்கானிப்பு கேமராவில் பதிவாகியுள்ள இந்த காட்சியில், ஒருவர் ஆக்ரோசமாக தாக்குவது பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், செவிலியர்களையும், மருத்துவர்களையும் தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 60 செவிலியர்கள் இன்று பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவ சங்க செயலாளர் ரவிசங்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். மேலும், மருத்துவர்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்யவும் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தாக்குதல் குறித்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சேரலாதன் மேட்டுப்பாளையம் காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில் காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.